சுனாமி நிதி சுருட்டிய சிங்களர்களிடம் நிவாரணம் கொடுப்பதா?-விஜயகாந்த்
சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்காக இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் கொடுக்கும் நிதி மற்றும் நிவாரண உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களைச் சென்று சேர வேண்டுமே ஒழிய, இலங்கை அரசிடம் கொடுக்கப்படக்கூடாது என தேமுதிக தலைவர் விஜய்காந்த கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு தரப்பினரும் பலவகையான உதவிகளை திரட்டி தமிழக அரசிடம் தருகின்றனர். இந்த உதவிகள் உண்மையில், மரணப் படுக்கையில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு போய்ச் சேருமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் இங்கு திரட்டப்படும் உதவிகளை ராஜபக்சேவிடம் தருவதைவிட, கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்து கொளுத்தி விடுவதோ நல்லதாக இருக்கும் என கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமி வந்தபோது, உலகம் முழுவதும் இருந்து வந்த நிதியை இலங்கை அரசே வைத்துக் கொண்டது. பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு நிவாரணம் சென்று அடையவில்லை.
எனவே, சுனாமி நிதியையே சுருட்டியவர்களிடம் நாம் அளிக்கும் உதவி, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போகாது.
இலங்கை அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் அங்குள்ள தூதரகத்தின் மேற்பார்வையில் தமிழ் மக்களுக்கு நேரில் கொடுக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ அல்லது ஐ.நா. சபையின் மூலமாகவோ வழங்கச் செய்ய வேண்டும்.
இலங்கை தமிழர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இன்றியமையாத தேவை முதலில் போர் நிறுத்தம்தான்.
தமிழக மக்களின் சார்பில் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டிய தமிழக முதல்வர் தனது ஆட்சியையும், அரசியல் கூட்டணியை தக்கவைத்துக் கொள்ள தமிழர் நலன்களை கைவிடலாமா என்பதே என் கேள்வி என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications