எங்களால் முடியாது..எங்களால் முடியாது..எங்களால் முடியாது
விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகளையும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அவற்றின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.
இதன் மூலம் தான் உங்கள் விற்பனையை அதிகரிக்க முடியும். விற்பனை தொய்வில்லாமல் இருந்தால் தான் உங்கள் நிறுவனங்களும் உங்களைச் சார்ந்த பிற நிறுவனங்களும் பிழைக்க முடியும், தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும்.
மக்கள் பொருள்களை வாங்கினால் தான் நாட்டின் பொருளாதாரம் தப்பும்.
தினமும் சென்செக்ஸையும் நிப்டியையும் (தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்) பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அவை நமக்குத் தருவது ஒரு தோராயமான கணிப்பைத் தான். அதை வைத்துக் கொண்டு நாம் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
நாட்டின் பொருளாதார நிலையை நிதியமைச்சகமும் அதிகாரிகளும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். நமது பொருளாதாரம் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டது, இதனால் நமக்கு இதுவரை பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இருந்தாலும் உலகளாவிய சிக்கல்களில் இருந்து நாம் தப்ப முடியாது.
லாபம் மட்டுமே முக்கியமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் நிறுவனங்களும் வங்கிகளும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இங்கே வந்திருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் அதிபர்கள், 30 சதவீத லாபத்தையும் ஆண்டுதோறும் 9 சதவீத வளர்ச்சியையும் கண்டு வருபவர்கள். நீங்கள் 9 முதல் 10 சதவீத லாபத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்ளை லாப நிறுவனங்களை மறைமுகமாத் தாக்கி ஒரு போடு போட்டார் சிதம்பரம்.
எங்களால் முடியாது.. வங்கிகள் தான் செய்யனும்:
ஆனால், நிதியமைச்சரின் விலை குறைப்பு யோசனையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறுகையில், கடந்த பல மாதங்களாகவே இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் விலை குறைப்பைத் தானே செய்து கொண்டு வருகிறோம். இனியும் இதில் குறைக்க என்ன இருக்கிறது. எங்களுக்கு ஒரு வாகனத்துக்கு 30 சதவீத லாபம் எல்லாம் கிடைப்பதில்லை. 4 முதல் 5 சதவீத லாபம் தான் கிடைக்கிறது. இது ரொம்ப கம்பி, இதில் இன்னும் விலையைக் குறைக்க வழியே இல்லை.
வங்கிகள் தான் கடன்களுக்கான வட்டியைக் குறைத்து மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்க முயல வேண்டும்.
இதே கருத்தையே ஹீரோ ஹோண்ட அதிபர் பிரிஜ் மோகனும் எதிரொலித்தார். ஊதியங்களும் பெட்ரோல் விலையும் மின்சார கட்டணமும் உயர்ந்து கொண்டிருக்கும் வரை எங்களால் விலையைக் குறைக்க முடியாது என்றார்.
எங்களால் முடியாது.. ரிசர்வ் வங்கி தான் பார்க்கனும்:
ஐசிஐசிஐ தலைவர் காமத் கூறுகையில், வங்கிகள் கடன் வட்டியைக் குறைக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டையும் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டி) சிஆர்ஆர்யையும் (வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கட்டாய முதலீடு) இன்னும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்டியைக் குறைக்க சாத்தியமில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை சிஆர்ஆர், ரெபோ ரேட்டை இன்னும் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குறைக்கலாம் என்றார்.
எங்களால் முடியாது.. ரியல் எஸ்டேட் தான் கவனிக்கனும்:
மேலும் அவர் கூறுகையில், மக்களிடையே வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் தான் வீடுகள், அப்பார்ட்மெண்டின் விலையைக் குறைக்க வேண்டும் என்றார்.
எங்களால் முடியாது.. வங்கிகள தான் உதவனும்:
ஆனால், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங் கூறுகையில், ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறை நஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதில் இன்னும் விலை குறைப்புக்கு சாத்தியம் எங்கே இருக்கிறது. வட்டி விகிதங்களை வங்கிகள் 7 சதவீதம் அளவுக்குக் குறைத்தால் தான் ரியல் எஸ்டேட் துறை பிழைக்க முடியும்.
இப்போதிருக்கும் வட்டிக்கு யாரால் கடன் வாங்கிவிட்டு ஒழுங்காக இஎம்ஐ கட்ட முடியும் என்றார்.
மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து மீண்டும் பந்தை ப.சிதம்பரத்திடமே போட்டுவிட்டனர்.