ஹைதராபாத் கல்லூரியின் ஐடியை போலியாக பயன்படுத்திய கஸாப்
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் ஐடி கார்டை போலியாக பயன்படுத்தியுள்ளான் மும்பையில் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் இமான் கஸாப் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள தில்சுக்நகரில் உள்ளது அருணோதயா டிகிரி கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஐடி கார்டைத்தான் கஸாப் போலியாக தயாரித்து பயன்படுத்தியுள்ளான் என்பதை மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கல்லூரி சாய் பாபா கோவில் அருகே உள்ளது. கல்லூரி அமைந்துள்ள தில்சுக் நகர் பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கஸாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐடி கார்டில், அருணோதயா கல்லூரியின் பெயரும், நகோல் பகுதியைச் சேர்ந்த நரேஷ் வர்மா என்ற பெயரில் இந்த ஐடி கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸாரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு இதுவரை தகவல் எதுவும் இல்லை. நாங்களும் மீடியா செய்தியின் மூலமாகத்தான் இதுகுறித்து அறிந்து கொண்டோம் என்றனர்.
அருணோதயா கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், நரேஷ் வர்மா என்பவரின் பெயருக்கு எங்களது கல்லூரியிலிருந்து ஐடி கார்டு எதுவும் விநியோகிக்கப்படவில்லை என்று மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நரேஷ் வர்மா என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஐடி கார்டும் நாங்கள் வழங்கவில்லை. எங்களது ரெக்கார்டுகள் அதை தெளிவுபடுத்துகின்றன. அந்தப் பெயரில் எந்த மாணவரும் இங்கு பயிலவில்லை என்றார்.
எனவே கஸாப் வைத்திருந்தது போலியான ஐடி கார்டு என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் கஸாப்புக்கு ஹைதராபாத்தில் ஆட்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications