பிரேமலதா கார் மீது திமுகவினர் பயங்கர தாக்குதல்
நேற்றிரவு திருமங்கலத்தில் திறந்த வேனில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்த பிரேமலதா இரவு 9 மணிக்கு கப்பலூர் வந்தார்.
அங்கு தனது வேனிலிருந்து இறங்கி மதுரைக்கு திரும்புவதற்காக தனது காரில் ஏறச் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பிரேமலதாவின் உருட்டுக்கட்டைகளால் அடித்து நொறுக்கியது.
மேலும் உடன் இருந்த தொண்டர்களின் 5 கார்களையும் அடித்து உடைத்தது.
பிரேமலதாவுடன் இருந்த தொண்டர் படையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் 6 தேமுதிகவினர் காயமடைந்தனர்.
இது குறித்து பிரேமலதாவின் தம்பியும் தேமுதிக இளைஞரணி பொதுச் செயலாளருமான சுதீஷ் நிருபர்களிடம் பேசுகையில்,
பிரேமலதாவை தாக்கியது திமுகவினர் தான். அவர்களது கட்சிக் கொடிகளை தேமுதிகவினர் கார்களை விட்டு மோதி சேதப்படுத்தியதாக க் கூறி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகிவிட்டது. தோல்வி பயத்தில்தான் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே பாதுகாப்பு கேட்டிருந்தும் போலீசார் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரவில்லை.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலில் எங்கள் கட்சியின் தொண்டர் படையை சேர்ந்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மதுரை பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மிரட்டலுக்கு பயப்படாமல் வாக்களியுங்கள்:
முன்னதாக திருமங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் பேசியதாவது:
விருந்தும், மருந்தும் 3 நாட்கள்தான் என்பார்கள். விருந்து முடிந்து விட்டது.
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கிராம வீதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த இடைத் தேர்தலால் கார்கள் பறந்த வண்ணம் உள்ளன. தேர்தலுக்கு பிறகு இந்த கார்களை எல்லாம் பார்க்க முடியாது.
மக்களிடம் பணம் கொடுத்து ஓட்டு பெற முயற்சிக்கிறார்கள். இதுவரை திமுக, அதிமுகவுக்கு நீங்கள் மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். சுதந்திரம் அடைந்தபோது கிராமங்கள் எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இன்றும் இருக்கின்றன. இனியும் ஏன் அந்த கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்?
வாக்காளர்களுக்கு கால் பவுன் தங்கம், மிக்சி, செல்போன் எல்லாம் தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த பணம் எல்லாம் வயலில் வியர்வை சிந்தி உழைத்த பணம் அல்ல. லஞ்சப் பணம்தான்.
இந்த விஜயகாந்த் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்க மாட்டான். சொல்வதை செய்வான். திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றால் வேலை வாய்ப்பை உருவாக்குவோம். அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம்.
மிரட்டலுக்கு பயந்து வீட்டில் இருந்து கொள்ள வேண்டாம். பயப்படாமல் மனசாட்சியுடன் சுதந்திரமாக ஓட்டு போடுங்கள். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இந்த விஜயகாந்த் களத்தில் குதிப்பான் என்றார்.