சிறையில் புத்தரை படிக்கும் ராஜூ!
ஹைதராபாத்: சிறைக்குப் போனபினதான் பலருக்கும் ஞானம் பிறக்கிறது... அல்லது ஞானம் தேடும் முயற்சியிலாவது இறங்க முடிகிறது போலும்.
53,000 ஊழியர்களின் வாழ்க்கை, பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் 'விளையாடி' இப்போது சிறையில் உள்ள சத்யம் ராமலிங்க ராஜு மிகுந்த மன அழுத்தத்தில் தவிக்கிறாராம்.
வரதட்சணைக் கைதிகளுடன்...:
தற்போது ராஜூவும் அவரது தம்பி ராமராஜூவும் இருக்கும் சிறை வரதட்சிணைக் கொடுமை செய்வர்களை அடைத்து வைக்கும் பகுதியாகும்.
இந்த செல்லில் மேலும் பல கைதிகளும் உள்ளனர். செய்தித் தாள் படிப்பது, டிவி பார்ப்பது இரண்டுமே வேண்டாம் என ராஜு சகோதரர்கள் கூறிவிட்டனராம்.
எல்லாக் கைதிகளையும் போலவே இவர்களுக்கு சிறை உணவு வழங்கப்படுகிறது.
முதலிரண்டு தினங்கள் தன் வக்கீல் பரத்குமார் மற்றும் சிறை அதிகாரிகள் தவிர யாருடனும் பேசாமல் இருந்த ராஜூ, நேற்று தனக்கு சில புத்தகங்கள் வேண்டும் எனக் கேட்டாராம்.
அவை கௌதம புத்தரின் தத்துவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள். ராஜுவின் மகன் தேஜா ராஜுவும், வக்கீல் பரத் குமாரும் இந்த நூல்களை வாங்கி வந்து ராமலிங்க ராஜுவுக்குக் கொடுத்துள்ளனர். பின்னர் அரை மணி நேரம் வரை தந்தையுடன் பேசிவிட்டுச் சென்றாராம் தேஜா ராஜு. மேடாஸ் நிறுவனம் இவரது பொறுப்பில்தான் உள்ளது.
சிறையில் அவர் யாரிடமும் பேசவில்லை. அவருடன் தங்கியுள்ள மற்ற கைதிகளும் அவருடன் பேச முற்படவில்லை என்று தெரிவித்தார் சிறை அதிகாரி ஒருவர்.
இந்நிலையில் ராஜூவுக்கு ஜாமீன் வழங்கக்கோரி நாம்பள்ளி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என நம்புகிறார் வக்கீல் பரத்குமார். ஆனால் வெளி நிலவரங்கள் அது அத்தனை சுலபமில்லை எனக் காட்டுகின்றன.
சத்யம் நிறுவன முன்னாள் சிஎப்ஓ சீனிவாஸ் வாட்லாமணியின் மனைவியும் ராமலிங்க ராஜூவை சிறையில் சந்தித்துப் பேசினார்.
ராஜுவுக்கு வாதாட 25 வக்கீல்கள்:
இதற்கிடையே ராஜுவுக்காக ஜாமீன் பெறுவதற்கும், கோர்ட்டில் ஆஜராகவும் 25 வக்கீல்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.