பெயரில் மட்டும் அண்ணா- ஜெ. மீது வீரமணி தாக்கு
சென்னை: அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அவரது லட்சியங்கள், கொள்கைகளுக்கு நேர் எதிராக செயல்படும் கட்சி தான் ஜெயலலிதாவின் அதிமுக ஆகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொழுந்து விட்டு எரியும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பது பற்றி தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சியினரும், ஒரே ஒரு கட்சியை தவிர, கூறுகின்றனர். அந்த ஒரே கட்சி அண்ணா பெயரை வைத்துக் கொண்டு அவரது லட்சியங்கள், கொள்கைகளுக்கு நேர் எதிராக செயல்படும் ஜெயலலிதாவின் கட்சியாகும்.
இல்லாவிட்டால் சிங்கள ராஜபக்சே கூட கூறத் துணியா வகையில், ஆணவத்தின் உச்சிக்கு சென்று அவ்வம்மையார், "தமிழர்களை கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல'' என்று அங்கே கொல்லப்படும் தமிழர்களைப் பற்றி அவ்வளவு அலட்சியமாக பதில் சொல்வாரா? வெட்கம்!
ஈழப் பிரச்சினையில் நமது சட்டமன்ற தீர்மானம் மனித சங்கிலி, அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து, வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தம் பற்றி பேச சொல்வதாக அளித்த வாக்குறுதி செயல்படவில்லையே என்ற வேதனை, அதுபற்றி இந்நாள் வரை எவ்வித விளக்கமோ, பதிலோ முதல்வருக்குக்கூட அளிக்காமல் இருப்பது தமிழர்களின் நொந்த உள்ளத்தை மேலும் நோகடிக்க செய்வதாக உள்ளது.
தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் உள்ள ஆட்சியை தெரிந்தோ, தெரியாமலோ கவிழ்க்க முயற்சிப்போருக்கோ, எண்ணுவோருக்கோ அல்லது தமது சொந்த விருப்பு வெறுப்பு இவைகளால் தற்போது சுமுகமாக உள்ள திமுக-காங்கிரஸ் உறவிற்கு மாற்று தேட, அம்மையாருடன் கூட்டு சேர்ந்து திமுக அரசுக்கு எதிராக இருப்போம் என்று கூட்டணிக்குள்ளே குழப்பம் விளைவிக்க எண்ணுவோரின் எண்ணம் ஈடேறுவதற்கோ, நமது போராட்டங்களும், முயற்சிகளும் துணையாகிவிடக் கூடாது.
திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்காகவே வந்த இயக்கம் அல்ல. ஈழப் பிரச்சினைக்காக 2 முறை ஆட்சியை இழந்த வரலாற்றை உடைய கட்சிதான். தமிழர் தம் வரலாற்றில் வராது வந்த மாமணியாக செயற்கரிய செய்யும் ஆட்சி என்பதை நினைத்து எதற்கு எவ்வளவு முன்னுரிமை எனதை யோசித்து முன்யோசனையுடன் நடந்து கொள்வது தமிழர் கடன் ஆகும்.
மேலும் புதுவையில் ராஜீவ் காந்தி சிலையை விஷமிகள் அவமதிப்பு செய்ததும் கண்டிக்கத்தக்குத என்று கூறியுள்ளார்.