சென்னையில் இலங்கை தூதரகத்தைத் தாக்க முயற்சி - 36 மாணவர்கள் கைது
சென்னை: இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென இலங்கை தூதரகத்தை தாக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் பார்த்தசாரதி ரோடு சந்திப்பு வழியாக இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோர் சேலம் சட்டக்கல்லூரியை சேர்ந்த 36 மாணவர்களை கைது செய்தனர்.
ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
நாமக்கல்லில் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
நாமக்கல் மோகனுர் ரோட்டில் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் இன்று காலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
கல்லூரிக்கு வெளியே நின்று இலங்கை ராணுவத்தை கண்டித்து, தாக்காதே தாக்காதே, தமிழர்கள் மீது தாக்காதே மத்திய அரசே, மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடு போன்ற கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்தனர்.
மன்மோகன்சிங் கொடும்பாவி எரிப்பு
இதற்கிடையே, திருச்சியில், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் திடீரென பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரின் உருவ பொம்மைகளை நடுரோட்டுக்கு கொண்டு வந்து அவற்றின் மீது தீ வைத்தனர்.
தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து உருவபொம்மைகளை எரித்ததாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்பட 12 பேரை கைது செய்தனர்.
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டுகளில் பணிபுரியும் வக்கீல்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமாரின் படத்திற்கு வக்கீல்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதுபோல் அனைத்து கோர்ட்டுகளிலும் மலர் தூவி மவுன மஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னேரியில் வக்கீலகள் திரளாக கலந்து கொண்டு இலங்கை அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ராஜபட்சேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இறுதியில் கொடும்பாவி எரிக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டது.