மாசி உற்சவம்-திருச்செந்தூரில் நாளை கொடியேற்றம்
திருச்செந்தூர்: தமிழகத்தில் பிரசித்த பெற்ற முருக பெருமானின் படை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நாளை மாசி உற்சவ திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோவில் திருவிழாக்களில் முக்கியமானது மாசி உற்சவ திருவிழா. இத்திருவிழா நாளை பிப் 28 அதிகாலை கொடியேற்றத்துடன் துவக்குகிறது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து 5 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமாள், தெய்வனை அம்மாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
5ம் திருவிழாவான 4ம் தேதி இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாரதனையும், 7ம் திருவிழாவான 6ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவையும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்திலும், 8ம் திருவிழாவான 7ம் தேதி பகல் 10.30 மணிக்கு சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேருகிறார்.
விழாவி்ன் உச்சகட்ட நிகழ்ச்சியாக 10ம் திருவிழாவான 9ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் தேவதாச சுந்தரம், அறங்காவலர்கள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications