புதிய தமிழகம்-மனித நேய கட்சி-தேசிய லீக் கூட்டணி
இது குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத் இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில்,
4 தொகுதிகளில் மனித நேய கட்சி போட்டி:
திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். எங்களுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.
இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் ஹைதர்அலி, பொள்ளாச்சியில் உமர், ராமநாதபுரத்தில் சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.
3 தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி:
புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
தேசிய லீக் 3 தொகுதிகளில் போட்டி:
இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றனர்.
ஒரே சின்னத்தில போட்டி:
இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளன.
பின்னர் ஜவாஹிருல்லா கூறுகையில், திமுகவுடன் 1995ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப் பார்த்தார்கள்.
அதுவும் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். திமுக காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது. சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்கவில்லை.
இப்போது திமுக 21 தொகுதிகளில் அல்ல 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் திமுக சின்னத்திலேயே நிற்கிறது. நாங்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கொள்கைகள் எனக்கு பிடிக்கும். அதிமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினேன் என்றார்.
டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கை தமிழர்களை திமுகவும் அதிமுகவும் கைவிட்டுவிட்டன. இலங்கை பிரச்சனையை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்வோம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்படவில்லை என்றார்.
பேசிக் கொண்டிருந்தபோதே அதிமுக வேட்பாளர் அறிவிப்பு...:
முன்னதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஆம்பூரில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவர் இனாயதுல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக கூட்டணியில் இருந்த எங்களுக்கு வேலூர் மற்றும் மத்திய சென்னை தொகுதியை கேட்டோம். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடத்திக் கொண்டிருந்தோம். திடீரென அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்து விட்டார். இது எங்களுக்கு வருத்தத்தை அளித்தது.
எங்கள் கூட்டணிக்கு பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், சுன்னத் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தந்துள்ளன.
பாமகவுக்கு ஆதரவு:
எங்கள் கூட்டணி வேட்பாளர் இல்லாத தொகுதியில் நாங்கள் பாமக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். பாமகவின் மதுவிலக்கு, புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவற்றில் எங்களது கொள்கையை ஒத்து உள்ளனர்.
தேமுதிகவில் வட மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிமை வேலூர் வேட்பாளராக அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றி அந்தத் தலைமைக்கு தெரியவில்லையா?. வட மாநிலத்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்றார் இனாயதுல்லா.