விருதுநகரில் வைகோவுடன் மோதும் கார்த்திக்
முத்துராமன் கார்த்திக். நிறைய பேருக்கு இவர் நல்ல நடிகர் என்று தெரியும். ஆனால் அரசியல் களம் புகுந்த இவர் நல்ல தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
ஏசி அறையை விட்டு வெளியே வந்தாலே வியர்த்து விறுவிறுத்துப் போய் விடும் கார்த்திக்குக்கு, அவர் நம்பிய, அவரை நம்பிய முக்குலத்தோர் மக்களை முழுமையாக கவர முடியாமல் போனதே உண்மை.
அரசியல் ஆர்வம் கொண்டு சரணாலயம் என்ற சமூக அமைப்பை உருவாக்கி அதற்குக் கிடைத்த பிரமாண்ட வரவேற்பைப் பார்த்து, கார்த்திக்கை பார்வர்ட் பிளாக் கட்சி தனது தமிழ் மாநில பிரிவுக்குத் தலைவராக்கியது.
ஆனால் யாருக்குமே கிடைத்திராத அருமையான வாய்ப்பு கிடைத்தும் கூட அதை முழுமையாக பயன்படுத்தத் தெரியாமல் கை நழுவ விட்டார் கார்த்திக்.
இதனால் கடுப்பாகிப் போன பார்வர்ட் பிளாக் கட்சி, கார்த்தி்க்கை கட்சியை விட்டே நீக்கியது. இதையடுத்து அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை உருவாக்கினார் கார்த்திக்.
இனி மேலாவது கட்சியை திறம்பட நடத்தி, முக்குலத்தோர் வாக்கு வங்கியின் ஏகபோக உரிமையாளராக கார்த்திக் மாறுவார் என எதிர்பார்த்தனர் பலரும். ஆனால் வழக்கம் போலவே வழ வழா கொழ கொழா தலைவராகவே இருந்து வருகிறார் கார்த்திக்.
தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். விருதுநகரி்ல போட்டியிடுகிறார்.
பி.பி.ஏ. படித்துள்ள கார்த்திக் தமிழ், தெலுங்கு உள்பட 150 படங்களில் நடித்து உள்ளார். 48 வயதாகும் கார்த்திக், விருதுநகரில் பலம் பொருந்திய வைகோவை சந்திக்கிறார்.
மலையுடன் மோதும் எறும்பாகத்தான் தோன்றுகிறார் கார்த்திக். ஆனால் அவரை இன்னும் நம்பும் முக்குலத்தோர் இளைஞர் வாக்கு வங்கி, விருநகரில் வைகோவுக்கு தலைவலியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியல் சக்தியாக கார்த்திக் மாறுவாரா, வைகோவின் வெற்றிக்கு எந்த அளவுக்கு இவர் இடையூறாக இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.