நடுக்காட்டில் நின்ற மலை ரயில்-பசியால் வாடிய பயணிகள்
மேட்டுப்பாளையம்: நடுவழியில் ஊட்டி மலைரயிலின் என்ஜின் ராடு உடைந்ததை அடுத்து பயணிகள் நடுக்காட்டில் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பின் அவர்கள் மாற்று என்ஜின் மீண்டும் மூலம் மேட்டுப்பாளையம் திரும்பினர்.
மேட்டுபாளையத்தில் இருந்து 46 கிமீ., தூரத்தில் இருக்கும் ஊட்டி வரை செல்லும் மலைரயில் சர்வதேச அளவில் பிரபலமானது. கடந்த 2005ல் இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னம் அந்தஸ்தை வழங்கி கவுரவித்தது. இதையடுத்து இந்த மலைரயில் வெளிநாட்டினரை கவர்ந்திழுக்க துவங்கியது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு ஊட்டி மலைரயில் சுமார் 250 பயணிகளை சுமந்து கொண்டு தனது பயணத்தை தொடர்ந்தது.
கல்லாறு பகுதியை தாண்டி எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த ரயிலுக்கு 10வது கிமீ., சிக்கல் ஏற்பட்டது. மரக்கிளை ஒன்று விழுந்து கிடப்பதை கண்ட டிரைவர் ரயிலை திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் என்ஜினில் இருந்த சைடு ராடு உடைந்துவிட்டது. ரயில் அந்த இடத்திலே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து குன்னூரிலிரு்ந்து மாற்று என்ஜின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. மலைபாதை மற்றும் பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுவது போன்ற காரணங்களால் என்ஜின் வர இரண்டு மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், மதியம் 1 மணியை தாண்டியும் என்ஜின் வரவில்லை. பயணிகள் அனைவரும் நடுக்காட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினர்.
கோடை விடுமுறை துவங்கிய நிலையில் பிள்ளை, குட்டிகளுடன் வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 1 மணி ஆனவுடன் குழந்தைகள் பசியால் வாடியுள்ளனர். அழுது கூப்பாடு போட்டுள்ளனர். ஏற்கனவே என்ஜின் வராமல் காத்திருந்து காத்திருந்து நொந்து போயிருந்த மக்களுக்கு பசி பிரச்சினையும் சேர்ந்து கொண்டு, வாட்டி எடுத்துள்ளது.
மீண்டும் மேட்டுப்பாளையம்...
பின்னர் ஒரு வழியாக மாற்று என்ஜின் சுமார் 6 மணி நேரத்துக்கு பின் மதியம் 2 மணிக்கு வந்தது. அதில் மலைரயிலில் இணைக்கப்பட்டது.
இதையடுத்து ஊட்டி சென்றுவிடலாம் என நினைத்த மக்களுக்கு மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் செல்வதாக அறிவிக்கப்பட்டது பெருத்த ஏமாற்றம் அளித்தது. அவர்கள் மாலை 3.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்த்தனர்.
இதையடுத்து அவர்கள் பேருந்து நிலையத்தில் ஊட்டி பஸ்சுக்காக கூட்டமாக காத்திருந்தனர். இதையடுத்து ஊட்டி பஸ்சில் கூட்டம் முண்டியடித்தது.
பராமரிப்பு சரியில்லை...
கூட்டத்தில் பஸ்சில் ஏற முடியாமல் அடுத்த பஸ்சிற்காக காத்திருந்த பயணி ஒருவர் கூறுகையில்,
ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பு சரியில்லாத காரணத்தால் தான் நாங்கள் நடுக்காட்டில் நீண்ட நேரம் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகளின் கவனக்குறைவும் ஒரு காரணம்.
இரண்டு நாள் விடுமுறையில் ஊட்டியை சுற்றி பார்க்க வந்தேன். ஆனால், ஒரு நாள் விடுமுறை நடுக்காட்டிலே முடிந்துவி்ட்டது. அடுத்து மீதமுள்ள ஒரு நாளில் ஊட்டியை அவசரமாக சுற்றி பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களை பார்க்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நடக்குமா என தெரியவில்லை.
காலையில் 7 மணிக்கு ரயிலில் செல்வதற்கு பதிலாக பஸ்சில் சென்றிருந்ததால் இந்நேரம் பாதி இடங்களை சுற்றி பார்த்திருப்பேன் என அங்லாகித்து கொண்டார் அந்த பயணி.