'நடேசன் மரணத்திற்கு பிறகே சரண் திட்டம் தெரியும்!'
கொழும்பு: பா.நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டு பத்து நிமிடங்கள் கழித்தே, பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபாய ராஜபக்சே, அவர்கள் சரணடைய திட்டமிட்டிருப்பதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தத் தகவல் தெரிந்திருந்தால் அவர்களை உயிருடன் கைது செய்திருப்போம் என்று கூறியுள்ளார் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.
வெள்ளைக் கொடியுடன் பா.நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ராணுவத்திடம் சரணடையச் சென்றனர். ஆனால் அவர்களை ஈவு இரக்கமின்றி ராணுவம் சுட்டுக் கொன்றது.
இதைத் தட்டிக் கேட்ட சிங்களப் பெண்மணியான நடேசனின் மனைவியையும், ராணுவ வீரர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் நடேசனும், புலித்தேவனும் சரணடைய திட்டமிட்டிருந்தது குறித்து தனக்கு முதலில் தெரியாது என்றும், அவர்கள் கொல்லப்பட்டு பத்து நிமிடங்கள் கழித்துத்தான் தனக்கு அதுகுறித்து தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார் பொன்சேகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விஷயம் சுமார் 7, 8 மணி நேரத்திற்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து எங்களுக்குத் தெரியும். அவர்களைக் கைது செய்வதன் மூலம் பல்வேறு விஷயங்களை அறிய முடியும்.
நடேசனும், புலித்தேவனும் சரணடைய வந்த போது படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போர் நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 300 மீ்ட்டர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நூற்றுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப்பட்டனர்.
18ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோதபாய ராஜபக்சே, அவர்கள் இருவரும் சரணடையப் போகும் விஷயத்தை எனக்குத் தெரிவித்தார்.
ஆயினும் அதற்குள் படையினரின் துப்பாக்கி ரவைகள் இருவரின் உடல்களையும் துளைத்து விட்டன. அவர்கள் சரணடையப் போவதை சுமார் 7 அல்லது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் நாங்கள் அவர்களைக் கைது செய்திருப்போம்.
சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்கள் காரணமாக காப்பாற்றப்படுவோம் என்று எண்ணியே அவர்கள் அதுவரையில் சரணடையாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.