தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்.
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடக்கிறது. இதை ஆதரித்து திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,
ஜனாதிபதி உரையில் பல்வேறு நல்ல திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், தமிழர்களின் நீண்டகால கனவான சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி உரையில் எந்த உறுதி மொழியும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாகவே நாங்கள் உணர்கிறோம்.
ராம பக்தர்கள் வருத்தப்படுவார்கள்...
தமிழகத்துக்கு பொருளாதார முன்னேற்றமும், வேலைவாய்ப்பும் கிடைக்கக்கூடிய சேது கால்வாய் திட்டத்தை ராமனின் பெயராலே தடை ஏற்படுத்தினால், அதை நிறைவேற்ற நினைக்கும் ராம பக்தர்களுக்கு அது வேதனையானதாகவே இருக்கும். இந்த திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
பல மதங்களுக்கும், மொழிகளுக்கும், பண்பாடுகளுக்கும் நாம் சம உரிமை கொடுத்து வருவதாக பேசி வருகிறோம். ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். இதற்காக இலங்கை அரசை வன்மையாக கண்டிக்க தவறிவிட்டோம். அப்பாவி மக்கள் மடிந்து போவதை தடுக்காமல் விட்டுவிட்டோம்.
தமிழர்களுக்கு உதவுங்கள்...
இப்பொழுதாவது இந்த அரசு தமிழர்களுக்கு உதவ முன்வர வேண்டும். போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உடனடியாக உதவ வேண்டும்.
அங்கு தவிக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய நதிகளை இணைத்து நதிநீர் நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் நதிகளை இணைப்பதற்கென்று ஏறத்தாழ ரூ. 300 கோடியில் திட்டம் தீட்டி, கடந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள கலைஞர், தேசிய நதிநீதிர் இணைப்பு திட்டத்திற்கும் முன்னோடியாக விளங்குகிறார்.
எனவே அவரிடமிருந்து நாம் பாடம் கற்று இத்திட்டத்தை நிறைவேற்றிடமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்றார் டிகேஎஸ் இளங்கோவன்.
கள் இறக்குவதை தடை செய்யக்கூடாது...
மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி பேசுகையில்,
ஜனாதிபதி உரையில், கள் இறக்கும் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு கள் இறக்கும் விவசாயிகளை கைது செய்து, கொடுமைப் படுத்தி வருகிறது. அவர்கள் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு, கள் இறக்கும் தொழிலை நம்பி உள்ளனர். எனவே, தமிழகத்தில் கள் இறக்குவதை தடை செய்யக்கூடாது.
ஜனாதிபதி உரையில் நிலம் அற்ற கூலித்தொழிலாளிகள், நெசவாளர்கள், மீனவர்கள், கள் இறக்குவோர், தோல் பதனிடுவோர், தோட்ட தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பீடி சுற்றுவோர் ஆகியோருக்கான நலத்திட்டங்கள் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊதியத்தி ரூ. 80 லிருந்து ரூ.100 ஆக உயர்த்த வேண்டும்.
மன்னி்க்க முடியாத துரோகம்...
இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதை தடுக்க, நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும். முழுமையான அதிகாரங்களை கொண்ட, தமிழர்களால் ஆளப்படுகின்ற, தனி தமிழ் மாநிலம் என்ற அமைப்பை ஏற்படுத்தினால்தான், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற ஈழத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்.
அண்மைக்காலத்தில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தோடு கைகோர்த்துக்கொண்டு தமிழர்களை படுகொலை செய்து உள்ளது. இலங்கை தமிழர்களை படுகொலை செய்கின்ற தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய அரசு உறுதுணையாக இருக்கின்றது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்தை, இந்திய அரசு மறுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு அதிராக, மேற்கு நாடுகளால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு குறித்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்கு அளித்து இருப்பது, மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்.
இலங்கை தமிழர்களின் நலன்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தவறான நடவடிக்கை இது. உலகம் முழவதும் வாழுகின்ற தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது. மதிமுக சார்பில், இந்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மூலம் தேர்தல் முன்பாகவும், தேர்தல் முடிந்த பிறகும்கூட தவறுகள் செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். எனவே இனி வருகின்ற தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்றார் அவர்.