புஷ் மீது ஷூ வீசிய முன்டாசருக்கு கார்கள், வீடுகள், மனைவி பரிசு
நாயே, இதுதான் உனக்கு நான் தரும் பிரியாவிடை முத்தம். ஈராக்கில் அனாதைகளாக்கப்பட்ட மக்களுக்கும், கணவரை இழந்த பெண்களுக்கும் நான் செலுத்தும் நன்றிக் கடன் இது என்று கூறியபடி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாக்தாத் வந்திருந்த ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி தனது கால்களில் இருந்த ஷூக்களை கழற்றி அடுத்தடுத்து ஸ்கட் ஏவுகணை போல வீசி உலகையே பரபரப்பில் ஆழ்த்தினார் ஜெய்தி என்பது யாராலும் மறந்திருக்க முடியாது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெய்தி, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து வருகிற திங்கள்கிழமை ஜெய்தி விடுதலை செய்யப்படவுள்ளார். ஈராக் அதிபரின் மன்னிப்பைத் தொடர்ந்து ஜெய்தி விடுதலையாகிறார்.
இதையடுத்து ஜெய்திக்கு பெருமளவில் பரிசுகள் குவிந்து வருகின்றன. கோடிக்கணக்கான பணம், கார்கள், வீடுகள் என சரமாரியாக பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஜெய்திக்காக, அவரது முன்னாள் பாஸ் நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட பிரமாண்ட வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார். புதிய கார்களும் காத்திருக்கின்றன. பணப் பரிசுகள் இதுவரை நிற்கவே இல்லை.
மொராக்கோவில் வசிக்கும் ஒரு ஈராக்கியர், தனது மகளை முன்டாசரின் மனைவியாக அறிவித்துள்ளார். முன்டாசர் ரிலீஸ் ஆனவுடன், அவரது வீட்டுக்கு தனது மகளை அனுப்பி வைக்கப் போகிறாராம். சவூதியைச் சேர்ந்த ஒருவர் முன்டாசரின் ஷூக்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தருவதாக கூறியுள்ளார். இன்னொரு மொராக்கோ காரர், தங்கம் பதித்த குதிரையைப் பரிசாக அனுப்பி வைக்கிறாராம்.
பாலஸ்தீனைச் சேர்ந்த பல பெண்கள் முன்டாசரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
ஆனால் இந்தப் பரிசு அறிவிப்புகளால் முன்டாசர் நிலை குலைந்து போய் விடவில்லை. சிறையில் தன்னைச் சந்தித்த தனது சகோதரர்கள் மைதம், வெர்கம் ஆகியோரிடம், விடுதலையான பின்னர் அனாதை இல்லம் ஒன்றை தொடங்கப் போவதாகவும், மீண்டும் பத்திரிக்கையாளராக மாற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்டாசரின் சகோதரர்கள் கூறுகையில், மறுபடியும் பத்திரிக்கையாளராக தொடர முன்டாசர் விரும்பவில்லை. அவர் ஏதாவது கேள்வி கேட்பார், பதிலளிக்க வேண்டியவர் இவர் ஷூவை வீசி விடுவாரோ என்று பயப்படும் நிலை ஏற்படும். இதற்காகவே மீண்டும் பத்திரிக்கையாளராக தொடர முன்டாசர் விரும்பவில்லை என்கின்றனர்.