மொபைல் லாட்டரி- ரூ. 13 லட்சம் மோசடி - நைஜீரியர் கைது
சென்னை: மொபைல் லாட்டரியில் ரூ. 5 கோடி விழுந்துள்ளது. அதை வாங்கி தர சுங்க வரி, அன்னிய செலவாணி கட்ட வேண்டும் என கூறி சென்னை பொறியாளரிடம் ரூ. 13 லட்சம் வாங்கி ஏமாற்றிய நைஜீரிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாங்காடு பகுதியில் இருக்கும் சாத்தையா என்ற பொறியாளருக்கு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உலக நோக்கியா மொபைல் லாட்டரியில் உங்களுக்கு ரூ. 5 கோடி விழுந்துள்ளது. பரிசு தொகையை பெற பின்வரும் இமெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவரும் தொடர்பு கொண்டார்.
அப்போது அவர்கள் சுங்க வரி அன்னிய செலவானி உள்ளிட்டவைகளை நீங்கள் கட்ட பணம் தேவைப்படும். அதற்காக எங்களுக்கு டெல்லியில் உள்ள வங்கியில் ரூ. 50 ஆயிரம் கட்ட வேண்டும் கூறியுள்ளனர்.
அவரும் ரூ. 5 கோடி வரப்போகிறது என்ற நம்பிக்கையில் பணம் கட்டியுள்ளார். இது போல் அவரிடம் இருந்து 9 தவணைகளில் ரூ. 13 லட்சம் வரை கறந்துள்ளனர்.
இதையடுத்து தங்களது இந்திய பிரதிநிதி பணத்தை கொண்டு வந்து தருவார் என கூறியுள்ளனர். அதை போல் டேவிட் வில்சன் என்ற நைஜீரிய வாலிபர் ஒருவர் வந்து சூட்கேஸ் ஒன்றையும், அதற்கான ரகசிய எண்ணையும் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
அதை திறந்துபார்த்த சாத்தையா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் பணம் எதுவுமில்லை. அதற்கு பதிலாக கருப்பு நிற தாள்கள் கத்தையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சாத்தையா, அந்த நைஜீரிய வாலிபரை தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த நைஜீரியர், அது அமெரிக்க டாலர்கள் என்றும், அதில் ஒரு ரசாயனத்தை தடவினால் மட்டுமே அது தெரிய வரும் என கூறினார். மேலும், அதற்கு ரூ. 32 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுவரை கண்மூடித்தனமாக பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த சாத்தையா இப்போதுதான் முதல் முறையாக சுதாரித்து யோசித்தார். தன்னிடம் பணம் கறக்க முயல்வதை உணர்ந்த அவர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த கும்பலுடன் தொடர்புடைய ஒலபாஜி (30) என்ற நைஜீரிய வாலிபர் சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீஸார் ஒலபாஜியைக் கைது செய்தனர்.
அப்போது அந்த கும்பல் போலி அமெரிக்க டாலர்களை தயாரிக்க தேவையான ரசாயனங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கறுப்பு பேப்பர்கள், ரசாயன கலவை, லேப் டாப், 20 கிராம் தங்க நகைகள், ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கும்பல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களையும் ஏமாற்றியுள்ளது. தமிழகத்தில் மேலும் பலர் ஏமாந்திருப்பார்கள் என கூறப்படுகிறது. கடந்த ஜுலை மாதம் போலீஸார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சிலரை கைது செய்திருப்பது நினைவிருக்கலாம்.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற நூதன மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த மோசடி இமெயில்கள் தொடர்ந்து சுதந்திரமாக உலா வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படித்தவர்களே பெருமளவில் இவர்களிடம் ஏமாறுவதும் குறிப்பிடத்தக்கது.