எங்கும் ஒளி பிறக்கட்டும்!: ஜெ-விஜய்காந்த் தீபாவளி வாழ்த்து
ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் என தருமை தமிழக மக்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளித் திருநாளன்று பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இறையொளியின் அம்சமாக தீபங்களாக தீபங்களாக ஏற்றி வைத்து வழிபடுவது மரபு!.
அறியாமை, அகம்பாவம், சினம் போன்ற தீய குணங்கள் அழிந்து எங்கும் ஒளி பிறக்க வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் பொருள். வாழும் காலத்தில் ஒருவன் தனக்காக வாழாமல் பிறருக்கு பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.
இந்த நன்னாளில் துன்பம் என்னும் இருள் அகன்று நன்மை என்னும் ஒளி அனைவரது வாழ்விலும் பிறக்கட்டும்!. அனைவருக்கும் அன்பையும், அமைதியையும், ஆனந்தத்தையும், ஒன்றுகூடி மகிழும் இன்பத்தையும் அளிக்கட்டும்!. கெட்ட எண்ணங்களும், பார்வைகளும் மறைந்து, சமத்துவமும், சகோதரத்துவமும் உருவாகட்டும்! என்று கூறியுள்ளார்.
ஆள்வோர் அகத்திலும் இருள்:
விஜய்காந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் திருநாள் தீபாவளி நாளாகும். நியாயங்கள் மட்டுமே வெற்றி பெறுவதுமில்லை. அநியாயங்கள் தாமே அழிந்து விடுவதுமில்லை. அநியாயத்தை எதிர்த்து, போரிட்டு வெற்றி பெற்றால்தான் நியாயத்தை நிலைநிறுத்த முடியும்.
ராமனாக இருந்தாலும், இலங்கை வரை சென்று ராவணனை போரிட்டு தான் சீதையை மீட்க முடிந்தது. அதைப்போல தீயசக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும்.
இன்று தமிழ்நாடே இருளில் தான் மூழ்கியுள்ளது. புற இருள் மட்டுமல்ல, ஆள்வோர் அகத்திலும் இருள் சூழ்ந்துள்ளது. இந்த நிலை மாறி, எல்லோரும் இன்ப வாழ்வு பெற்றிட நல்ல காலம் பிறக்கட்டும். இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதே போல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்
ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.