தமிழகத்தில் மீண்டும் மழை வலுக்கிறது!

இதன் மூலம், தமிழகத்தில் 3வது கட்ட வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
வங்கக் கடலில் குமரிக் கடல் பகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசம் வரை, கடலோரப் பகுதிகள் மற்றும் உட் பகுதி வழியாக மேகக் கூட்டம் வியாபித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், உட்புறப் பகுதிகளில் இன்று சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. அதிக அளவாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10செமீ மழை பெய்தது.
வல்லம் 8 செமீ, அதிராம்பட்டினம், சங்கராபுரம், திருக்கோவிலூர், கல்லணை, தேவகோட்டை தலா 5, திருக்காட்டுப்பள்ளி, திருச்சி தலா 4, பரங்கிப்பேட்டை, பெருங்காலூர், ராமநாதபுரம், போளூர், முசிறி, வத்திராயிருப்பு, கொடைக்கானல் தலா 3, கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கொல்லிடம், ஆர்.எஸ்.மங்கலம், அரியலூர், சோழவந்தான் தலா 2, தொழுதூர், திண்டிவனம், ஓரத்தநாடு, கந்தர்வக்கோட்டை, கீரனூர், புதுக்கோட்டை, கோவில்பட்டி, ஆம்பூர், ராயக்கோட்டை, தோகைமலை, பஞ்சப்பட்டி, கதவூர், செட்டிக்குளம், வேம்பாவூர், பெரம்பலூர், புல்லம்பாடி, ஸ்ரீவில்லிபுத்தூர், பேரையூர், வாடிப்பட்டி தலா 1 செமீ மழை செய்துள்ளது.
20ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு..
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
அடுத்த 2 நாட்களுக்கு வானிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளார் ரமணன்.
பலத்த மழை பெய்யும் - இங்கிலாந்து வானிலை அறிக்கை
இந்த நிலையில் பிபிசி வானிலை ஆய்வறிக்கையில் இன்று இரவு முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் இன்று இரவு பரவலாக மழை பெய்யும். வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்திசை நோக்கி காற்றின் போக்கு சாதகமாக வீசுகிறது என்று சென்னை வானிலை மையமும் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் கன மழை கொட்டக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னையில் இன்று பரவலாக மழை...
இந் நிலையி்ல் சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.
நகரின் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளில் காலையில் வெயில் கொளுத்தியது. முற்பகலிருந்து விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
சென்னை-கடந்த ஆண்டைவிட 13% அதிக மழை:
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது சென்னையில் குறைந்த நாட்கள்தான் மழை பெய்தது என்றாலும் மழை அளவு கடந்த ஆண்டை விட அதிகமாகியுள்ளது.
சென்னை நகரில் வழக்கமாக பருவமழை காலத்தில் சராசரியாக 473.2 மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 536 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு இதேநாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் 6539 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 6233 மில்லியன் கனஅடி உள்ளது. இது 306 மில்லியன் கனஅடி குறைவு என்றாலும் டிசம்பர் வரை வருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே நீர்மட்டம் மேலும் உயரும்.












Click it and Unblock the Notifications