அதிபர் தேர்தல்-பொன்சேகாவுக்கு ரணில் கட்சி ஆதரவு
ஏற்கனவே ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொன்சேகாவுக்கான ஆதவை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று அறிவித்தார்.
இதுகுறித்து ரணில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைப் புலிகளை வீழ்த்திய ஹீரோவான பொன்சேகாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றார்.
பயந்த பொன்சேகா-!தைரியம் தந்த ராஜபக்சே:
எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை அதிபர் ராஜபக்சேதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கைப் பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், எனது ராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார். பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்த பின்னர் அதிபர் ராஜபக்சே கிளிநொச்சிக்குப் போனபோது உடன் வர அவர் பயப்பட்டார், அஞ்சினார், தைரியம் இல்லாமல் வர மறுத்தார்.
போர் முடிந்ததும், அதிபர் ராஜபக்சே கிளிநொச்சி போக விரும்பினார். அதை ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை விட்டு விடுமாறு அதிபரிடம் கூறினார் பொன்சேகா. மேலும், கிளிநொச்சிக்கு அதிபருடன் வரவும் அவர் பயந்தார். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார். தனது பயத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் அதிபர், பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார். பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.
அதன் பின்னர் போர் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் அதிபர் ராஜபக்சே. கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது போர்க்களத்திற்குச் சென்ற முதல் உலக அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
அதேபோல மாவிலாறு சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்சே. அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் படுத்துக் கிடந்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் நாட்களலும் கூட போர் முனைக்கு அவர் ஒருமுறை கூட சென்றதில்லை. கொழும்பில் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
நான் ஒருபோதும் தோல்வியைச் சந்தித்ததில்லை என்று கூறும் பொன்சேகாவின் தலைமையில்தான் இலங்கை ராணுவத்திற்கு முகமலை பகுதியில் 3 முறை தோல்வி கிடைத்தது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர்.