ஒபாமா விருந்தில் பங்கேற்றது எப்படி-சொல்வதற்கு பணம் கேட்கும் அழையா விருந்தாளி ஜோடி!
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தபோது அவருக்கு அதிபர் ஒபாமா சிறப்பு விருந்து கொடுத்தார். உலகின் கவனத்தை ஈர்த்த இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் வெர்ஜினீயா மாகாணத்தைச் சேர்ந்த தாரிக் சலாஹி என்பவரும் அவரது மனைவி மிஷலும் அழையா விருந்தாளிகளாக, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ளே சென்றனர்.
ஒபாமாவுடன் மிஷல் கை குலுக்கி பேசினார். விருந்திலும் அவர்கள் பங்கேற்றனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகே அவர்கள் இருவரும் ஒபாமா விருந்தில் கலந்து கொள்ள முன் அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அவர்கள் எப்படி விருந்து அரங்குக்குள் நுழைந்தனர் என்பது மர்மமாக இருந்தது.
அமெரிக்க போலீசாருக்கும், உளவுத்துறைக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தாரிக்கையும் மிஷலையும் சோதிக்காமல் உள்ளே அனுப்பிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாங்கள் எப்படி உள்ளே போனோம் என்பதைச் சொல்லப் போவதாக சிஎன்என் டிவிக்கு அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களின் பேட்டியைக் காண ஆர்வம் ஏற்பட்டது அமெரிக்காவில்.
இந்த நிலையில் திடீரென அதை ரத்து செய்து விட்டனர் தாரிக் தம்பதியினர். காரணம், தங்களுக்கு அதிக பணம் கொடுப்பவர்களுக்கே பேட்டி என்று கூறி விட்டனர். அதுவும் கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார்களாம்.