அமெரிக்க அமைச்சர் பிளேக் கொழும்பு விரைகிறார்
கொழும்பு: இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவர்களின் மனப் புண்ணை ஆற்றும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக அமெரிக்காவின் தூதராக தெற்காசிய விவகார இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கொழும்பு வருகிறார்.
அடுத்த வாரம் திங்கள்கிழமை இலங்கை வரும் பிளேக் 2 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராவார் பிளேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பயணத்தின்போது இலங்கை அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை பிளேக் சந்திப்பார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி முதல் முகாம் கதவுகளைத் திறந்து விட்டு அனைத்து அகதிகளுக்கும் சுதந்திரம் கொடுத்து விட்டதாக இலங்கை அரசு கூறியது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.
ஆயிரக்கணக்கான அகதிகள் தங்க இடம் இல்லாமல் சாலைகளில் திரியும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். அவர்களின் சொந்த ஊர்களை ராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்து அங்கு யாரும் போக முடியாத நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சுதந்திரம் அளித்து விட்டதாக ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ் மக்களுக்கான புணரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்ல இலங்கை அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என நேரில் வலியுறுத்த பிளேக் வருகிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கைக்கு அமெரிக்கா 58 மில்லியன் டாலர் நிதியுதவியை அளித்தது. தற்போது கூடுதல் நிதியுதவி அளிக்கவும் அது தயாராக உள்ளது. இதன் பொருட்டும் பிளேக் வருவதாக தெரிகிறது.
பிளேக்கின் வருகைக்குப் பி்ன்னணி...?
இதற்கிடையே இலங்கை அதிபர் தேர்தலையொட்டி பிளேக் வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்க நலன்களுக்கு வாய்ப்பான ஒருவர் வெல்லுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதும் பிளேக்கின் பயணத்திற்கு ஒரு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதற்கு ஏற்ற விதமாக, இலங்கையில் உள்ள தமக்குச் சாதகமான அரசியல் சக்திகளின் மீது - குறிப்பாக தமிழ் கட்சிகளின் மீது பிளேக் அமெரிக்காவின் செல்வாக்கைப் பிரயோகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராஜபக்சே அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் அமெரிக்கா அக்கறையாக இருப்பதாக நம்பப்படும் ஒரு சூழலில் பிளேக்கின் இந்த திடீர் பயணம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
சிறார் புலிகளை சந்தித்த ஐ.நா. தூதர்
இந் நிலையில் இலங்கை வந்துள்ள ஐ.நா தூதர் பாட்ரிக் காமரட் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு செயல்பட்டு வந்த சிறார்களை சந்தித்துப் பேசினார்.
ஐ.நா.வின் சிறப்புத் தூதராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பாட்ரிக் காமரட் இலங்கை வந்துள்ளார். இவர் புலிகள் அமைப்பிலிருந்து மீட்கப்பட்ட 300 இளம் சிறார்களை சந்தித்து உரையாடினார்.
மட்டக்களப்புக்கும், வவுனியாவுக்கும் அவர் செல்லவுள்ளார். அங்கு மீட்கப்பட்ட இளம் போராளிகளுக்கான மறு வாழ்வு பயிற்சி மையத்தைப் பார்வையிடவுள்ளார்.
இங்கு 11,000க்கும் மேற்பட்ட முன்னாள் போராளி இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது.