வடிவேலு பட பாணியில் மாயமான கோவில் குளம்!
சென்னை: வடிவேலு ஒரு படத்தில் கிணறைக் காணோம் என்று அலறியபடி போலீஸில் புகார் கொடுத்து அத்தனை பேரையும் டென்ஷனாக்குவார். அதே பாணியில் தற்போது ஒரு கோவிலில் இருந்த பிரமாண்ட குளத்தை காணவில்லை.
சென்னை வடபழனியில் உள்ளது வேங்கீஸ்வரர் கோவில். இது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது.
இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிக்காக கோவில் அருகிலேயே மண் தோண்டியதால் அங்கு பெரும் பள்ளம் ஏற்பட்டு அது பின்னர் ஊரணியாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த ஊரணி, தற்போது உள்ள நூறு அடி சாலையில், இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 32 கிரவுண்ட் என்று அரசின் நில அளவைப் பதிவேடுகள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட ஊரணியை, நூறு அடி சாலை அமைக்கும் பணியின்போது பாதி ஊரணியை, நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தினர். மிச்சம் மீதம் இருந்த இடம் கோவில் வசம் இருந்து வந்தது.
கட்டெறும்பு தேய்ந்து சித்தெறும்பாக மாறிய கதையாக, பிரமாண்டமாக இருந்த ஊரணி, நெடுஞ்சாலைத் துறையினர் கைப்பற்றிய பின்னர் சுருங்கிப் போய் குளமாக மாறியது. இந்த ஊரணியிலிருந்துதான் கோவிலுக்குத் தேவையான தண்ணீரை எடுத்து வந்தனர். இது 70களில் நடந்த கதை.
ஆனால் அதன் பின்னர் இந்த ஊரணியின் ஒரு பகுதியை கோவில் நிர்வாகத்தினர் வணிக ரீதியாக மாற்றி பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் குளமும் காணாமல் போய் விட்டது. இதனால் வெறும் தரைதான் இருக்கிறது. அதாவது வடிவேலு பட பாணியில் ஊரணியும், குளமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டன.
ஆனால் கோவில் நிர்வாகத்தினரோ, முழு பூசணிக்காயை ஒரு டம்பளர் பாலில் போட்டு மறைக்கும் முயற்சியில் உள்ளனர்.
இங்கு ஊரணியோ, குளமோ கிடையாது. வெறும் நிலம்தான் இருந்து. நூறடி சாலை மற்றும் ஆற்காடு சாலைகளின் உயரம் அதிகரித்ததால் கோவில் நிலம் பள்ளமாகி விட்டது. இந்த இடத்தில் உள்ள கடைகளுக்கு நில வாடகை வசூலிக்கப்படுகிறது என்கிறது கோவில் நிர்வாகம்.
ஆனால் அரசின் நில அளவை ஆவணங்களில் ஊரணியும், குளமும் இருந்ததாக பக்காவாக தகவல்கள் உள்ளன. அரசு ஆவணங்களே தெளிவாக ஊரணியும், குளமும் இருந்ததாக கூறும்போது கோவில் நிர்வாகம் மாற்றிக் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய நீர் நிலையை அழித்து கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறது தற்போது கோவில் நிர்வாகம். பெருமளவிலான வாடகை வசூலிக்கப்பட்டும் கூட 2000 சதுர அடிக்கு வெறும் ரூ. 150 மட்டும்தான் வாடகையாக வசூலிப்தாக அரசுக்கும் கணக்கு காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் சதுர அடிக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை வாடகை தருவதாக இங்குள்ள கடைக்காரர்கள் குமுறுகின்றனர். அப்படியானால் மீதமுள்ள பணத்தை கோவில் நிர்வாகம் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறதா என்று கேட்கின்றனர் கோவில் பக்தர்கள்.
இந்து அறநிலையத்துறையின் இந்தக் கோவில் உள்ளது. எனவே வாடகைக்கு விடுவதாக இருந்தால் டெண்டர் விட்டுத்தான் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ அப்படியெல்லாம் நடப்பதாக தெரியவில்லை. எனவே அறநிலையத்துறைக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா, இல்லை என்றால் இந்த பகல் மோசடியை அறநிலையத்துறை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடைகள் போதாதென்று தற்போது குளம் இருந்த இடத்தின் நடுப்பகுதிக்கு அருகே 3 மாடிக் கட்டடமும் பிரமாண்டமாக எழுந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சுரண்டியது போக மீதமுள்ள குளத்தையாவது தூர்வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பக்தர்கள் என்று பார்க்காமல், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களின் கருத்து என்று நினைத்து இதைச் செய்ய அரசு முன்வந்தால் நலம்.












Click it and Unblock the Notifications