மின் இணைப்பு இல்லை- அரை குறையாக தயாராகியிருக்கும் புதிய சட்டசபை!
புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பெரும் பொருட் செலவில் ஏ மற்றும் பி பிளாக் என இரு பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் சட்டசபை மண்டபத்தை தயார் செய்யும் பணிகள் முழுமை அடைந்து விட்டன. இதில்தான் சமீபத்தில் நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
ஆனால், ஊழியர்கள், அதிகாரிகள் அமர்ந்து பணி செய்வதற்கான அறைகள் இன்னும் தயாராகவில்லை.
இதுகுறித்து சட்டசபை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்,
சட்டப் பேரவைச் செயலகத்தில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அதில், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அறைகள் இருந்தால் தான் பணியாற்ற முடியும். ஆனால், புதிய சட்டப் பேரவையில் ஊழியர்கள், அதிகாரிகளுக்கான அறைகள் தயாராகவில்லை.
பழைய சட்டப் பேரவையில் இருந்து புத்தகங்கள், பீரோக்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றாலும் புதிய பேரவையில் அவற்றை வைப்பதற்கு இடமில்லை என்றனர்.
இதை விட முக்கியமாக சட்டசபைக்கு இன்னும் மின் இணைப்பு தரப்படாமல் உள்ளது. தற்போது ஜெனரேட்டர்களை வைத்துத்தான் மின்சாரம் பெற்று வருகின்றனர்.
இதை வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர்களை இயக்க வேண்டும் என்றால் அது வேலைக்கு ஆகாது. நீண்ட நேரத்திற்கு ஜெனரேட்டரை வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர்களை இயக்க முடியாது. அது சரிப்பட்டும் வராது.
தற்போதைய நிலையில் சட்டசபை வளாகத்தை முழுமையாகத் தயார்படுத்த 2 மாதங்களுக்கு மேலாகும் என்று கூறுகிறார்கள்.
அறைகள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. மின் இணைப்பு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் சட்டசபை வளாகம் அரைகுறையாகவே தயாராகியுள்ளது.
நாளை பட்ஜெட் விவாதம் தொடக்கம்:
இதற்கிடையே, புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.
கடந்த 19ம் தேதி நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 26ம் தேதிக்கு சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி நாளை சட்டசபை கூடுகிறது. நாளைய கூட்டம் அரை மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. முன்பண மானியக் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றி விட்டு அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.