பாவூர்சத்திரம் பகுதியில் நெல், அரிசி விலை உயர்வு
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் ஒன்றியம் விவசாயத்தி்ற்கு அடுத்தப்படியாக நெல், அரிசி வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்யப்படும் அரிசி தமிழகத்தின் பல நகரங்களுக்கும், கேரளாவிற்கும் அனுப்பப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை உயர்ந்த நிலையில் இருந்த நெல் விலை இப்பகுதியில் அறுவடை நேரத்தில் குறைந்தது. தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில் நெல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ரூ.750க்கு விற்கப்பட்ட 72 கிலோ கொண்ட ஒரு மூடை டீலக்ஸ் பொன்னி அரிசி நெல் ரூ.850 ஆகவும், அதிசய பொன்னி ரகம் ரூ.700 லிருந்து ரூ.800 ஆகவும், அம்பை 16 ரகம் ரூ.750ல் இருந்து ரூ.900 ஆகவும், ஏடிஜே 45 ரகம் ரூ.700ல் இருந்து ரூ.750 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. தற்போது கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் இருந்து மட்டுமே நெல் விற்பனைக்கு வருகிறது. ஏடிஜே 45 ரக நெல் மட்டும் செஞ்சியில் இருந்து வரவழைக்கப்படுகிறது. வழக்கமாக இப்பகுதிக்கு கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பகுதியில் இருந்து நெல் விற்பனைக்கு வரும். தற்போது அங்கு கூடுதல் விலை கிடைப்பதால் நெல் வரத்து இல்லை.
எனவே இப்பகுதியில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நெல் விலை உயர்வு காரணமாக அரிசி விலையும் அதிகரித்துள்ளது. டீலக்ஸ் பொன்னி அரிசி ஒரு குவிண்டால் ரூ.1700ல் இருந்து 2 ஆயிரமாகவும், அதிசய பொன்னி, ஏடிஜே 45 ரக அரிசி ரூ.1500ல் இருந்து ரூ.1800 ஆகவும் அம்பை 16 ரகம் ரூ.1600ல் இருந்து ரூ.1900 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.