மும்பை ரயில் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனது
மும்பையில் மோட்டார் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் வர்த்தக தலைநகரான மும்பை ஸ்தம்பித்துப் போனது. மொத்தம் உள்ள ரயில்களில் 20 சதவீத ரயில்கள் மட்டுமே இயங்கின. 80 சதவீத ரயில்கள் ஓடாமல் போனதால் நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது.
மும்பை மாநகரின் இயல்பு நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட 70 லட்சம் பயணிகள் பாதிப்பை சந்தித்தனர்.
மும்பையில் மொத்தம் 1200 மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது. ஸ்டிரைக் காரணமாக இன்று வெறும் 250 சேவை மட்டுமே செயல்பட்டது. சர்ச்கேட் –விரார் ரயில் நிலையங்களுக்கு இடையே நீண்ட தொலைவு ரயில் பெட்டிகளை இணைத்து ஓட்டினர்.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 10 மோட்டார் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் ஸ்டிரைக் காரணமாக மக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளதால் மகாராஷ்டிர அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வந்தது.
ரயில்வே ஸ்டிரைக் மோசமாகி வந்த்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானின் உத்தரவுப்படி உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், மோட்டார் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படவே இன்று மாலை ஐந்து மணியளவில் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மும்பை ரயில் ஊழியர்களின் போராட்டம் இன்று லோக்சபாவில் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒட்டு மொத்த எம்.பிக்களும், ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.