இளைஞர்களைக் கொல்கிறார்கள், பெண்களைக் கற்பழிக்கிறார்கள்-கொல்லத்தில் சிக்கிய தமிழர் பேட்டி
கொல்லம்: இலங்கையில் எங்களால் இனி வாழவே முடியாது. தமிழ் இளைஞர்களை ஒருவர் விடாமல் பிடித்துக் கொண்டு போய் கொல்கிறார்கள். இளம் பெண்களை கற்பழிக்கிறார்கள். இதனால்தான் அங்கிருந்து தமிழர்கள் பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் இலங்கையிலிருந்து இந்தியா வழியாக வெளிநாடு செல்ல முயன்று பிடிபட்ட தமிழர்களில் ஒருவரான செல்வா என்பவர்.
கொல்லத்தில் இந்தத் தமிழர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தபோது கேரளாவின் கைரளி தொலைக்காட்சி சேனல்,செல்வா என்ற தமிழரிடம் பேட்டி கண்டுள்ளது.
அதில் செல்வா கூறுகையில், ராணுவத்திடம் துப்பாக்கி உள்ளது. கண்களில் பட்ட தமிழர்களையெல்லாம் சுடுகிறான்.
அங்கு தமிழர்களால் வாழவே முடியாது. எங்களுக்கு இனிவாழ்க்கை இல்லை. இளைஞர்களை சுட்டுக்கொல்கிறார்கள்,பெண்களைக் கற்பழித்து சீரழிக்கிறார்கள்.
இதனால்தான் உயிரைப் பணயம் வைத்து படகுகள் மூலமாகவும், பிற வழிகளிலும் நாங்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போய்க் கொண்டிருக்கிறோம். எங்களால் இனி நிம்மதியாக அங்கு வாழ முடியாது என்றார் செல்வா.