டக்ளஸ் தேவானந்தாவை தப்பி செல்ல விடக்கூடாது-பாஜக

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். கொலை, ஆள் கடத்தல், கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
ஒரு நாட்டின் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரை இலங்கை அதிபர் ராஜபக்சே துணிச்சலாக அழைத்து வந்துள்ளார். இந்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் தான் இதற்குக் காரணம்.
டக்ளஸ் தேவானந்தா பற்றிய முழு வரலாறும் தெரியாமல் அவரை ராஜபக்சே அழைத்து வந்ததாக கருத முடியாது. நான் அழைத்து வந்தால், உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற ராஜபக்சேயின் ஆணவ வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க வோண்டும்.
ராஜபக்சேயின் இந்த துணிச்சலுக்கு பின்னணி இருக்கவும் வாய்ப்பு உண்டு. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, ராஜபக்சேக்கு ஏதோ ஒரு வகையில் நன்றிக் கடன்பட்டுள்ளது.
எனவே தான் இவ்வளவு துணிச்சலாக டக்ளஸ் தேவனந்தாவை ராஜபக்சே அழைத்து வந்துள்ளார்.
போபால் விஷவாயு வழக்கிலும் அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசும், ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசும் யூனியன் கார்பைடு ஆலை தலைவர் ஆன்டர்சனை தப்ப வைத்துள்ளன.
இந்த உண்மைகள் எல்லாம் ராஜபக்சேவுக்கு தெரியும். எனவே தான் கையாலாகாத இந்த மத்திய அரசால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற திடமான நம்பிக்கையில் தான் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை உடன் அழைத்து வந்துள்ளார்.
தேடப்படும் குற்றவாளிகளை தேடிக்கொண்டு இருப்பதை விட தானாக முன்வந்து நாட்டின் பிரதமரிடம் கைகுலுக்கி உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நகையாடி இருப்பது இனிமேல் நமது நாட்டின் 'தேடப்படும் குற்றவாளி' என்ற வார்த்தையை பயன்படுத்துவதே அர்த்தமற்றதாகிவிடும்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் டக்ளஸ் தேவானந்தா பற்றி டெல்லி போலீசுக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளை அனுப்வது போல தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய சிறப்பு படையை அனுப்ப வேண்டியது தானே?.
அவரை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது. உடனே கைது செய்ய வேண்டும். தேடப்படும் குற்றவாளியை மறைத்து வைப்பதும் சட்டப்படி குற்றம். எனவே இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக, காங் நடத்தும் கொடுமையான நாடகம்:
முன்னதாக ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே புதுடெல்லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வரவேற்பை அளித்துள்ளது. ஏற்கனவே இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து வந்த தமிழக எம்.பி.க்கள், இப்போது மீண்டும் டெல்லியில் அவரைச் சந்தித்துள்ளனர். இது வெறும் சம்பிரதாய சந்திப்பாக நடைபெற்றுள்ளது.
தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்னும் 3 மாதங்களில் குடிமயர்த்தப்படுவார்கள் என்று எப்போதும் சொல்வதையே இப்போதும் ராஜபக்சே சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டு, ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதைப் போல தமிழக எம்.பி.க்கள் திரும்பி வந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் கொடுமையைவிட, ஆளும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. மற்றும் ராஜபக்சே நடத்தும் நாடகம் பெரும் கொடுமையாக உள்ளது.
இந்தியா - இலங்கை இடையே இப்போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மேம்போக்கான, கண்துடைப்பான ஒரு ஒப்பந்தம் தவிர, திட்டவட்டமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.
இதிலிருந்தே, தமிழர்களை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் கூட்டாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் ராஜபக்சே தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். இந்திய நாட்டின் சட்டம், ஒழுங்கு எவரையும் விட்டு வைக்காது என்பதை புரிய வைக்க வேண்டும். எனவே, டக்ளஸ் தேவானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இலங்கையில் நடக்கும் மறு சீரமைப்புப் பணிகளில் சீனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணிகளை தமிழர்களுக்கு வழங்க ராஜபக்சேவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications