காமன்வெல்த் போட்டி: மணிசங்கருக்கு ஷீலா தீட்சித் கண்டனம்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்துவது வீண் செலவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறிய கருத்துக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டி குறித்து அய்யர் கூறுகையில்,
ஏழைகள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் காமன்வெல்த் விளையாட்டு போன்ற மிகப் பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவது தண்டச் செலவு.
இந்தப் போட்டிக்காக டெல்லி மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளால் டெல்லியில் ஒரு சில பகுதிகள் மட்டுமே பயனடையும். இந்தப் போட்டிக்காக செலவழிக்கப்படும் பணத்தை, வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என்றார்.
மணிசங்கரின் இந்த கருத்துக்கு முதல்வர் ஷீலா தீட்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அய்யரின் கருத்து நியாயமில்லாதது. இந்தப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் ஒட்டுமொத்த டெல்லியும் பலனடையும்.
போக்குவரத்து நெரிசல் குறையும். புறநகர்ப் பகுதிகளும் வளர்ச்சியடையும் என்றார்.