ஜெ.வுக்கு எதிராக திட்டமிட்டபடி ஆக.4ல் போராட்டம்-திமுக இளைஞர் அணி முடிவு
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கை முடிக்க விடாமல் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து திட்டமிட்டபடி ஆகஸ்ட் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. அன்பகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இளைஞர் அணி துணை செயலாளர்கள் மேயர் மா.சுப்பிரமணியன், இ.ஜி.சுகவனம் எம்.பி., ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- சொத்து குவிப்பு வழக்கை 13 ஆண்டுகள் ஆகியும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி வாய்தா வாங்கியே வழக்கை நீடித்து வரும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மக்களை தொடர்ந்து அவமதித்து வரும் போக்கினை எதிர்த்தும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 4-8-2010 அன்று தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- முதல்வர் கருணாநிதி அரசின் அளப்பரிய சாதனைகளை மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில், தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களின் வார்டுகள், கிராமங்கள், குக்கிராமங்கள் தோறும் தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்துவதோடு, சாதனைகளை பட்டியலிட்டு அச்சிட்டு, வீடுகள் தோறும் விநியோகிக்கப்படும்.
- தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், தி.மு.க. உதயமான நாள் ஆகியவற்றை குறிக்கின்ற வகையில், முப்பெரும் விழாவாக கொண்டாடிவரும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மாணவர்களும் பங்குபெறும், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு முறையான பரிசுகளை, சான்றிதழ்களை தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் எழுச்சியோடு கொண்டாடும் முயற்சிகளில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்புகள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பின்னர் வெளியில் வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே? என்று கேட்டபோது, அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை என்றார்.
அழகிரி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, அது தவறான செய்தி என்றார்.