பாஜக பிரமுகரின் நட்சத்திர ஹோட்டல் சூறை-கார்கள் இடித்ததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
சென்னை: காரை எடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலை ஒரு கும்பல் சூறையாடி விட்டது.
சென்னை கிண்டி, வேளச்சேரி சாலை எபனேசர் அவன்யூவைச் சேர்ந்தவர் தர்மசேனன் எபனேசர். இவரது மகன் சித்தார்த். தனது நண்பர் தருண் மல்கோத்திராவை அவரது நீலாங்கரை வீட்டில் விடுவதற்காக காரில் அழைத்துச் சென்றார்.
வீட்டில் இருந்து திரும்பும்போது, சித்தார்த்தின் காரின் பின்னால் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்தக் காரை சற்று விலகிக் கொள்ள சொன்னபோது, சித்தார்த்துக்கும், அந்த காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறு முற்றியதில் அந்தப் பகுதியில் உள்ளவர்களும், காரில் வந்தவர்களும் சேர்ந்து சித்தார்த்தின் காரை உடைத்துவிட்டனர். இதனால் பயந்துபோன சித்தார்த், உடனே தருண் வீட்டுக்குள் ஓடி தஞ்சமடைந்தார். பின்னர் தனது தாயார் சவுமித்ரிக்கு போன் மூலம் தெரிவித்தார். சவுமித்ரி வந்து சித்தார்த்தை மீட்டுச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து சவுமித்ரிக்குப் போன் வந்தது. அதில் பேசிய நபர், உனது மகனை என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கச் சொல்.இல்லாவிட்டால் வெட்டி எறிந்து விடுவேன். உன்னையும், உனது மகனையும் கொன்று விடுவேன் என பேசிய நபர் மிரட்டினார்.
இந்த சம்பவம் முடிந்த நிலையில் நேற்று இரவு சித்தார்த்தின் அக்கா தீபா வீட்டின் மாடியில் இருந்தபோது ஒரு நபர் உள்ளே புகுந்து அவரிடம் வம்பு செய்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட கும்பல், வீட்டின் முன் திரண்டு நின்று கையில் உருட்டுக்கட்டை, கற்களுடன் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சவுமித்ரி உதவி கோரி சத்தம் போட்டார். இதையடுத்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், காரை அடித்து உடைத்து விட்டு அந்தக் கும்பல் ஓடி விட்டது.
இதுகுறித்து கிண்டி போலீஸில் சவுமித்ரி புகார் கொடுத்தார். இதன் பேரில் 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சினிமா பாணியில் ரவுடித்தனம்:
இந்த சம்பவத்திற்கு முன்பு 2 நாட்களுக்கு முன்பு இரவு பத்தே முக்கால் மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலுக்கு ஒரு கும்பல் ஐந்து இன்னோவா கார்களில் வந்தது. அதேபோல 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களிலும் பெரும் கும்பல் திரண்டு வந்தது. கிட்டத்தட்ட 100 பேர் அதில் வந்தனர்.
வந்த வேகத்தில் ஹோட்டலின் முன்பகுதியை அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. டிவி, கம்ப்யூட்டர்கள், பெரிய பெரிய கண்ணாடிகள், பூந்தொட்டிகள், அலங்கார இருக்கைகள் என கண்ணில் பட்டதையெல்லாம் அவர்கள் அடித்து நொறுக்கினர்.
இதுபோல வரவேற்பாளரிடம் இருந்த ரூ. 3.60 லட்சம் பணத்தையும் திருடிக் கொண்டு ஓடியது அந்தக் கும்பல். இதைப் பார்த்து வரவேற்புப் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டவர்கள் பயந்து அலறி ஓடினர். அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் 100 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கும்பலைத் தேடியதில் அருள், ரவி, வடிவேல், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் என ஐந்து பேர் மட்டும் சிக்கியுள்ளனர். இவர்கள் ஆட்டோ டிரைவர்கள் ஆவர். நான்கு ஆட்டோக்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் வினோஜ் செல்வம். இவரும், சித்தார்த்தும் நண்பர்கள். வினோஜ் பாஜக பிரமுகர் ஆவார். இளைஞர் அணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
சித்தார்த்துக்கு வேண்டியவர் என்பதால் அவரது ஹோட்டலை சூறையாடியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஹோட்டலை பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். வன்முறை வெறியாட்டம் ஆடிய கும்பலை பிடிக்க வேண்டும் என காவல்துறைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் சர்வ சாதாரணமாக வீடு புகுந்து பெண்ணிடம் வம்பு செய்தும், வீட்டைத் தாக்கியும், நட்சத்திர ஹோட்டலையும் தாக்கி சூறையாடிய செயல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட கும்பல் அரசியல் பின்புலத்துடன் கூடியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.