தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தம்-தமிழகத்தில் பாதிப்பில்லை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி தொழிற்சங்கம் உள்பட 8 இன்று தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்திற்கு பாஜக சார்ந்த பி.எம்.எஸ். ஆதரவு தெரிவித்தது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
வங்கிப் பணிகள் முடக்கம்:
பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், பாதுகாப்புத்துறை, தொலை தொடர்பு துறைகளில் முடக்கம் ஏற்பட்டது. சில தனியார் வங்கிகளிலும் இன்று வேலை நிறுத்தம் முழு அளவில் நடந்தது. வங்கிப் பணிகளில் இன்று 90 சதவீதம் நடைபெறாமல் முடங்கின.
எல்.ஐ.சி., நேசனல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் ஆகியவை நாடெங்கும் முழுமையாக இயங்கவில்லை. இதனால் இன்சூரன்ஸ் பணிகள் முடங்கின.
வட மாநிலங்களில் வேலை நிறுத்தம் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மும்பையில் ஆட்டோ, டாக்சிகள் ஓடவில்லை. பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், கொல்கத்தா நகரங்களிலும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
இடதுசாரி மாநிலங்களில் முழு வெற்றி:
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் முழுமையாக இருந்தது.
நடந்தது. கொல்கத்தா வெறிச்சோடி காணப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து இன்று எந்த விமான சேவையும் நடைபெறவில்லை.
இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனம் தனது 29 விமான சேவையை ரத்து செய்தது. ஜெட் மற்றும் ஜெட்லைட் விமான நிறு வனம் 70 விமானங்களை ரத்து செய்தது.
தமிழகத்தில் பாதிப்பில்லை:
அதேசமயம், இந்த வேலை நிறுத்தம் தமிழகத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கம்யூனிஸ்ட் ஆதரவு அதிகம் உள்ள கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்கூடங்கள், பின்னலாடை நிறுவனங்கள், மில்கள் உள்ளிட்டவற்றில் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.
மாநில அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கின. வங்கிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்திலும் தடை இல்லை. அதேசமயம் பல பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை.
முன்னதாக தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு யாரையும் வலியுறுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரித்திருந்தது.
தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்:
வேலை நிறுத்த போராட்டத்தை ஓட்டி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் இருமாநில போக்குவரத்து தொடர்பு இன்று தூண்டிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் இன்று 16 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இருந்தபோதிலும் அரசு பஸ் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. போராட்டம் காரணமாக போக்குவரத்து கழகத்தில் பணிக்கு வராதவர்களுக்கு பதிலாக வேறு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இதே போல் தமிழகத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பஸ் சேவையில் பாதிப்பு இல்லை. பாதுகாப்பு கருதி கேரளாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன. இதே போல் கேரள பஸ்களும் தமிழகத்துக்கு வரவில்லை. நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் தூத்துக்குடி டெப்போவில் இருந்து புனலூர் கொட்டாரகரைக்கு இயக்கப்படும் அரசு பஸ் சேவை இன்று நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து நெல்லை, செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆழப்புழா, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 10 பஸ்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோருதல், புதிய ஓய்வூதிய திட்டங்களை வாபஸ் பெறக் கோருதல், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை எதிர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 07.09.2010 செவ்வாய் கிழமையன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சில தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினர் ஆதரவு அளிக்க உத்தேசித்துள்ளனர்.
இந்த பொது வேலை நிறுத்த அறிவிப்பினால் ஏற்படக் கூடிய சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஓர் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் சனிக்கிழமை (4.9.2010) நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், உள்துறை முதன்மைச்செயலாளர் உள்ளிட்ட அரசு செயலாளர்கள், மாநில காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கும் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் தங்கு தடையின்றி இயங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்; பேருந்துகளையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்த முயலுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், குடிநீர், பால் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களை தடையில்லாமல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்; பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத நடவடிக்கைகளில் மற்றும் வன்முறை, நாச வேலை ஆகிய செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகரில் காவல் துறை ஆணையர்களும் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், 7-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது எந்தவிதமான தங்குதடையின்றி நுகர்வோருக்கு, பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பண்டிகைக்காலங்களை கருத்தில் கொண்டு, ஆவின் பால் பொருட்கள் நுகர்வோருக்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.