கிருஷ்ணகிரி அருகே விபத்தில் மாணவன் பலி: பள்ளி, வேன், தாளாளர் வீடு, காருக்கு தீ வைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி வேன் மோதி சைக்கிளில் வந்த மாணவன் பலியானதையடுத்து அந்தப் வேனுக்கும், பள்ளிக்கும் தீ வைக்கப்பட்டது.
மேலும் பள்ளித் தாளாளரின் வீடு மற்றும் காருக்கும் தீ வைத்தனர் கிராமவாசிகள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சாம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் என்ற தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தவர் சின்னக்கரடியூரைச் சேர்நத் சேட்டு என்பவரின் மகன் சுரேஷ் (17)
இன்று காலை சைக்கிளில் பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் வாசலில், பள்ளிக்கு சொந்தமான வேன் மாணவன் மீது மோதியது. இதில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஓடி வந்தனர். அவர்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந் நிலையில் சிலர் பள்ளிக்கு தீ வைத்தனர். இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
மேலும் மாணவன் மீது மோதிய பள்ளி வேனுக்கும் தீ வைத்தனர். இதில் அந்த வேன் எரிந்து கூடானது.
பள்ளிக்கு தீ வைத்ததில் கம்யூட்டர்கள், 15 குளிர்சாதனப் பெட்டிகள், டெஸ்குகள், மேஜைகள், நாற்காலிகள், மாணவ- மாணவர்களின் டி.சிக்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் முற்றிலும் எரித்து நாசமாயின.
தீ பயங்கரமாக பற்றி எரிந்ததில் பள்ளிக் கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.
இதைத் தொடர்ந்து போச்சம்பள்ளி அருகே மோட்டூரில் உள்ள பள்ளித் தாளாளரின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கி வீட்டை சூறையாடிவிட்டு தீ வைத்தனர். அவரது இன்னோவா காரையும் தீ வைத்து எரித்தனர்.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வண்டிகளையும் ஆயிரக்கணக்கா கிராம மக்கள் வழிமறித்து நிறுத்தி கெரோ செய்தது. இதனால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் கிருஷ்ணகிரி எஸ்பி பாபு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. சாமிநாதன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. ஆகியோரும் விரைந்து வந்தனர்.
தீ வைத்த கும்பலை போலீசார் கலைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தனர். இதன் பின்னரே தீயணைப்பு வண்டிகளால் தீயை அணைக்க முடிந்தது.
பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது அறிந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர் அவர்களை அழைத்துச் செல்ல பள்ளிக்கு படையெடுத்தனர். தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பள்ளி வளாகத்தில் தவித்த பல மாணவ, மாணவிகளை போலீஸார் பாதுகாப்புடன் வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த மாணவனின் உடல் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான பஸ்சின் டிரைவர் மூவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீயில் சுமார் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் அவை மாற்று பாதையில் பஸ்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன.
இந்த சம்பவத்தையடுத்து போச்சம்பள்ளி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.