மாவோயிஸ்டுகளை ஒடுக்க வீரப்பன் வேட்டை உத்திகளை பயன்படுத்த மாட்டோம்-விஜயக்குமார்
சிஆர்பிஎப்பின் புதிய தலைவராக விஜயக்குமார் பதவியேற்றுள்ளார். நேற்று அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மாவோயிஸ்டுகளை ஒடுக்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். உள்நாட்டு தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு திட்டங்களை தீட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பன்முகச் சவால்களை தற்போது சிஆர்பிஎப் சந்தித்து வருகிறது. இவற்றை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் நிர்வாக ரீதியாகவும், உத்திகள் ரீதியாகவும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
இவற்றில் நக்சலைட் வேட்டைதான் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே அதை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கேற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படும். புதிய உத்திகள் வகுக்கப்படும்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பயன்படுத்திய யுக்திகளை பயன்படுத்த மாட்டோம். மாவோயிஸ்ட் வேட்டையில் முக்கிய உயரத்தை எட்டுவோம்
ஒவ்வொரு முக்கிய நடவடிக்கைக்கும் ஒரு உத்தியைப் பயன்படுத்துவோம். நாம் சந்திக்கும் சவாலுக்கேற்ற வகையில்தான் உத்திகளை வகுக்க முடியும். அதேசமயம், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மாதிரியான உத்திகளைப் பயன்படுத்த முடியாது.
வீரப்பனுக்கு காடுதான்பலமாக இருந்தது. அதேபோல நக்சலைட்களுக்கும் காடுதான் பலமாக உள்ளது.இருவருக்குமே உள்ளூர் மலைவாசிகள், கிராமவாசிகள் ஆதரவாக இருந்தனர். இது இரு தரப்புக்கும் உள்ள ஒற்றுமை. அதேசமயம், வீரப்பனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட உத்திகள் நக்சலைட் வேட்டைக்கும் பயன்படும் என எதிர்பார்க்க முடியாது.
வீரப்பன் வேட்டையின்போது கிடைத்த அனுபவங்கள் நக்சல் வேட்டையில் பயன்படக் கூடும். நமது அனுபவம் நமக்கு எப்போதுமே கை கொடுக்கும், எங்காவது உதவும். அதேசமயம், நிச்சயம் உத்திகள் மாறும். இடத்தையும், களத்தையும் பொறுத்தே உத்திகளை வகுப்பேன்.
மாவோயிஸ்டுகள் காடுகளில் இயங்கி வந்தாலும் கூட நகர்ப்பகுதிகளில்தான் அவர்களுக்கு பெருமளவிலான உதவிகள் கிடைக்கின்றன. ஆட்கள் தேர்வு, தார்மீக ஆதரவு, உணவு உள்ளிட்டவற்றின் சப்ளை போன்றவை பெரும்பாலும் நகர்ப்புறங்களிலிருந்துதான் அவர்களுக்கு வருகின்றன. இதுதவிர நிதி சேகரிப்பு உள்ளிட்டவற்றையும் அவர்கள் நகரங்களில்தான் நடத்துகின்றனர். எனவே கிராமங்களில்தான் அவர்கள் பலமாக இருக்கின்றனர் என்று கூற முடியாது.
ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் பங்கர்களை அகற்றும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீருக்கான எட்டு அம்சத் திட்டத்தி்ல இதுவும் ஒன்று. இது எந்தஅளவுக்கு பலன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பலன் தராவிட்டால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றார் விஜயக்குமார்.