வன்னியர்கள் ஓட்டுப் போடாததால் கோபாலபுரத்திற்கும், போயஸ் கார்டனுக்கும் அலைய வேண்டியுள்ளது-ராமதாஸ்
கும்பகோணம்: வன்னியர்கள் பாமகவுக்கே தங்களது ஓட்டுக்களைப் போடாமல் இருப்பதால்தான் கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி அலைய வேண்டியுள்ளது என்று விரக்தியுடனும், வன்னியர்களை குறை கூறும் வகையிலும் பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சமீப காலமாக தேர்தல் கூட்டணி குறித்து கிட்டத்தட்ட புலம்பவே ஆரம்பித்து விட்டார் டாக்டர் ராமதாஸ். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறார்.யாரும் அழைக்காமல் இருப்பதால் தனது கோபத்தை வன்னியர்கள் மீதே காட்டவும் ஆரம்பித்துள்ளார்.
வன்னியர்கள் முழுமையாக பாமகவுக்கு வாக்களிப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டிப் பேசி வருகிறார்.
இந்த நிலையில், கும்பகோணத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து சாராயத்தை ஒழிப்பதற்கு தான். அதற்கு பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள வன்னியர்கள் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவதில்லை. யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்றும் தெரியவில்லை.
நம்மை வேறு சாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. வன்னியர்கள் மற்ற சாதிக்காரர்களுக்கு அடியாளாகவும், வேலைக்காரனாகவும் இருக்கவே விரும்புகின்றனர். ஆனால் நாங்கள் நல்லவனாக படித்தவனாக, வேலைக்கு போகிறவனாக சமுதாயம் உருவாக வேண்டும் என்கிறோம்.
விழிப்புடன் இருந்தால்தான் அறிவார்ந்த சமுதாயமாக உருவாக முடியும். மற்ற சமுதாயத்திற்கு மனதால் கூட தீங்கு நினைக்கக்கூடாது என்ற பயிற்சியை வன்னியர்களுக்கு நாம் அளித்து வருகிறோம்.
ஓட்டு போடுகிற, குடிக்கிற, மற்றவர்களுக்கு உழைக்கிற சாதியாக வன்னியர்கள் இல்லாமல் படித்தவர்களாக இருக்கவேண்டும். அறியாமையை போக்கி மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் அளவிற்கு இருக்கவேண்டும்.
இந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் வன்னியர்கள் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் சுமார் 50 ஆயிரம் பேராவது இருப்பார்கள். இந்த மக்கள் ஓட்டுகளை போட்டால் ஜெயிக்க முடியாதா? வன்னியர்கள் ஓட்டு போடாததால் கோபாலபுரத்திற்கும், போயஸ் கார்டனுக்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருக்கிறது.
குடிப்பழக்கம் இல்லாத தெரு, குடிப்பழக்கம் இல்லாத ஊர், பேரூர், நகரம், மாவட்டம், மாநிலம் என்று இருந்தால், தமிழ் மாநிலம் குடிபழக்கம் இல்லாத மாநிலமாக உருவாகும். பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டும், சம உரிமை வேண்டும் என்று வலியுறுத்துவதும் பா.ம.க.தான்.
குடிப்பழக்கம் இல்லாத கணவன், மகன்களை பெண்கள் உருவாக்க வேண்டும். அதுவே சமுதாயத்திற்கு நல்லது. அதே போன்று வரதட்சணை ஒழிய வேண்டும். நாங்கள் செல்லும் திருமண கூடங்களில் 3 மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் கூறி வருகிறது. குடித்துவிட்டு சீரழிந்து வரும் ஆண்கள் திருந்தவேண்டும், குடிக்காத சமுதாயம் தேவை என்றும், அதற்காக நன்றாக படிக்கவேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம்.
பிரி.கே.ஜி. முதல் பெரிய படிப்பு வரை பெற்றோரிடம் சிறிதளவு கூட பணம் வாங்காமல் இலவசமாக அரசே கட்டணத்தை செலுத்தவேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளியாக இருந்தாலும் அரசே கட்டணம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சமுதாயம் படித்த சமுதாயமாக உருவாகும்.
அதற்காகத்தான் சமச்சீர் கல்வி என்றும், தரமான கல்வி, கட்டணமில்லாத கல்வி என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதெல்லாம் எப்போது நடக்கும் என்றால் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால்தான் நடக்கும். வருகிற 5 ஆண்டு காலத்திற்குள் குடிக்காத சிறிய பையன்களே இருக்கமாட்டார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார் ராமதாஸ்.