பாஜக ஆட்சியின் தொலைத் தொடர்புத்துறை கொள்கை-டாடா விமர்சனம்: ராஜீவ் சந்திரேசகருக்கு பதிலடி
அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் டாடா வர்ணித்துள்ளார்.
பாஜக ராஜ்யசபா எம்பியான ராஜீவ் சந்திரசேகர் டாடாவுக்கு விடுத்திருந்த பகிரங்க கடிதத்தில், ரத்தன் டாடா ஒளிவுமறைவின்றி செயல்படத் தவறி விட்டார். அரசின் தொலைத் தொடர்புக் கொள்கையால் பெரும் பலனை அடைந்தவர் டாடாதான் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் ராஜீவ் சந்திரசேகருக்கு டாடா அனுப்பியுள்ள பகிரங்க பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொலைத் தொடர்புத்துறையின் கொள்கைகளை அமல்படுத்த விட முடியாமல் தடுத்துக் கொண்டிருந்த சக்திகளை உடைத்தெறியும் வகையில் சமீபத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறையின் கொள்கை அமைந்துள்ளது.
அரசின் தொலைத் தொடர்பு கொள்கை மிகச் சரியானதே. உண்மையில், கடந்த பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொலைத் தொடர்புத்துறை கொள்கைதான் பல குளறுபடிகளைக் கொண்டதாக இருந்தது. இதை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும்.
தற்போது நீங்கள் (ராஜீவ் சந்திரசேகர்) எந்த அரசியல் கட்சியுடன் (பாஜக) அணி சேந்திருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே பிரதமருக்கும், ஆளும் கட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்வகையில் என் மீது அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளீர்கள்.
உங்களது பகிரங்கக் கடிதத்தின் பின்னணி அதுதான்.
டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவோ அல்லது வேறு எந்தத் தொலைத் தொடர்பு அமைச்சருமோ சாதகமாக நடக்கவில்லை. எந்தவித சலுகையும் காட்டவில்லை.
கடந்த 2002ம் ஆண்டு ராஜீவ் சந்திரசேகர், நடுநிலை தொழில்நுட்ப கொள்கைக்கு எதிரான தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கு ஆதரவாக என்னிடம் கையெழுத்துப் பெறவும் அணுகினார். தனது முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளும் சுய நல நோக்குடன்தான் ராஜீவ் சந்திரசேகர் எப்போதுமே செயல்பட்டு வருகிறார்.
ராஜீவ் சந்திரசேகர் சார்ந்துள்ள பாஜக பின்னணியே அவரை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. அவர்களுடைய அரசியல் சுயலாபத்திற்காக என்னைப் பகடைக் காயாக்கி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்.
உண்மையில், பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கைதான் பல குளறுபடிகளைக் கொண்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தை தடுத்தததும் பாஜகவின் தொலைத் தொடர்புக் கொள்கைகள்தான் என்று கடுமையாக கூறியுள்ளார் டாடா.