'மிரட்டி காரியம் சாதிப்பவர்': பிரகாஷ் காரத் குறித்து அமெரிக்கா விம்ர்சனம்- விக்கிலீக்ஸ் தகவல்
காரத் குறித்து டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனில் உள்ள தனது வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள ரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் காரத் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றார்.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிக்க இருந்த நேரத்தில், அப்போதைய அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''இந்திய வெளியுறவு கொள்கையின் நம்பகத்தன்மை அந்தரத்தில் ஊசலாடுகிறது. அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில், சோனியா காந்தி திறமையான தலைவியாக செயல்பட தவறியதுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மிரட்டி காரியம் சாதிப்பவர் என்பதை அம்பலப்படுத்தத் தவறி விட்டார். பிரகாஷ் கரத்தின் மிரட்டல் அணுகுமுறைகளால், காங்கிரஸ் கட்சி பயந்து போயுள்ளது''.
''சர்வதேச அணுசக்தி கழகத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வற்புறுத்துவோம். பாஜக ஆட்சியிலேயே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டது என்பதால், இது உங்களின் ஒப்பந்தம்தான் என்பதை பாஜகவிடம் வலியுறுத்திக் கூறுவோம்''. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு காரத் கண்டனம்:
இதுகுறித்து பிரகாஷ் காரத் கூறுகையில், விக்கிலீக்ஸ் இணையதள தகவல் மூலம இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அழிக்கவும், பலத்தைக் குறைக்கவும் இதுபோன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது என்றார்.