ஜிசாட் செயற்கைக் கோள் ஏவுவது திடீர் தள்ளிவைப்பு
ஹைதராபாத்: ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜின் வால்வில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து நாளை ஏவுவதாக இருந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
ஜிசாட்-5 பிரைம் என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் நாளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவிருந்தது. இதற்கான 30 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்கியது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டு விட்டது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ராக்கெட் செலுத்தும் கவுண்ட்டவுன் நின்றது குறித்து விளக்கியுள்ளது இஸ்ரோ. ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினின் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் செலுத்துவது தள்ளிப் போடப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
ஜிசாட் செயற்கைக் கோள் வரிசையில் இது 5வது செயற்கைக் கோளாகும். தகவல் தொடர்புத்துறைக்கான பிரத்யேக செயற்கைக்கோள் இது. செயற்கைக்கோளின் எடை 2310 கிலோவாகும்.