ஊழல்வாதிகளுக்கு எதிராக எங்களைப் போல பாஜகவால் செயல்பட முடியுமா?-சோனியா சவால்

காங்கிரஸ் கட்சியின் 83வ மாநாடு டெல்லி அருகே புராரியில் தொடங்கியது. கட்சி்த தலைவர் சோனியா காந்தி கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஊழலை எந்த மட்டத்திலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஊழலுக்கு எதிராகவும், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் காங்கிரஸ் விரைந்து செயல்பட்டது. ஆனால் அதேபோல செயல்பட முடியுமா பாஜக என்பதை அறிய விரும்புகிறேன். எங்களது முதல்வரை, அமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க முடிந்தது. அதேபோல பாஜகவால் செய்ய முடியுமா?
அரசு நில ஒதுக்கீடு போன்றவற்றில் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழும் வகையில் காங்கிரஸ் முதல்வர்கள் செயல்பட வேண்டும்.
நமது பிரதமர் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர். மரியாதைக்குரியவர். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால் காங்கிரஸ் கட்சி பிரதமருக்கு முழு ஆதரவாக உள்ளது. அவரை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அவருக்கு என்றும் துணை நிற்போம்.
அரசியல் பிளாக்மெயில்களுக்காக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். அனைத்து மதங்களும் நமது நாட்டின் கலாச்சார சின்னங்களாகும், அவற்றுக்குரிய மரியாதையை நாம் அளிக்க வேண்டும். அடிப்படைவாதத்திற்கு எதிராக எப்போதும் காங்கிரஸ் செயல்பட்டு வந்திருக்கிறது. குறுகிய லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துவதே அடிப்படைவாதமாகும். சமூகத்தில் துவேஷத்தையும், பிளவையும் ஏற்படுத்தவே இந்த அடிப்படைவாதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது சிலரால்.
இதுபோன்ற பிளவுபடுத்தும் கொள்கைகளுடன் கூடியவர்களை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. மதங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துவோருக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்.
அடிப்படைவாதமோ அல்லது தீவிரவாதமோ எந்த மதத்தினர் செய்தாலும், அது பெரும்பான்மை மதமோ அல்லது சிறுபான்மை மதமோ, பொறுத்துக் கொள்ள முடியாது. நமது நாட்டின் மத சகிப்புத்தன்மை சமய நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க காங்கிரஸார் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளிலிருந்து வழுவாமல் கவனமாக இருக்க வேண்டும். பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்ய முயல வேண்டும்.
பல சவால்களை, ஏற்றத் தாழ்வுகளை காங்கிரஸ் சந்தித்துள்ளது. நமது கடந்தகாலத்தை நாம் பெருமையுடன் திரும்பிப் பார்க்க முடியும். நாம் பெற்றுள்ள அந்த பாரம்பரியத்தை நாம் மறக்காமல் சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும். நாம் எவ்வளவு தூரதத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நமது கடந்த காலத்தைக் கொண்டாட நாம் இங்கு கூடவில்லை. நமது முன்னேற்றம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வந்திருக்கிறோம் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications