திசை மாறி வந்த தமிழக மீனவர்களை 14 நாள் விசாரித்து திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: திசைமாறி இலங்கை கடல் எல்லைக்குள் சென்ற ஜெகதாபட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு 14 நாட்கள் விசாரணை என்ற பெயரில் வைத்திருந்து விட்டு பின்னர் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கணேசன் (35), சந்தோஷ் (35), மகிமைநாதன் (35) ஆகியோர் ஒரு விசைப்படகில் கடந்த 5-ம் தேதி அதிகாலை கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் படகில் திடீர் என்று என்ஜின் கோளாறு ஏற்பட்டு, படகு தாறுமாறாகச் சென்று இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தது. அங்கிருந்த பாறை ஒன்றில் மோதி நின்றது. பின்னர் 3 மீனவர்களும் நெடுந்தீவு பகுதியில் இருந்த இலங்கை கடற்படையிடம் சரண் அடைந்தனர்.
அவர்களை இலங்கை கடற்படை முகாமில் கடந்த 14 நாட்களாக வைத்திருந்தனர். நேற்று அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடலோர காவல் படை அவர்களை நேற்று மாலை 5 மணி அளிவில் மண்டபம் அழைத்து வந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் உறவினர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது,
வழிமாறிச் சென்ற நாங்கள் கடந்த 14 நாட்களாக இலங்கை கடற்படை முகாமில் பத்திரமாக இருந்தோம். எங்களை விடுவித்துவிட்டனர். ஆனால் எங்கள் படகு அவர்களிடம் தான் உள்ளது. பல லட்சம் மதிப்புள்ள படகை மீட்டுத்துர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதேபோன்று ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வடிவழகு, சுப்பிரமணியன், சக்திவேல், சக்திகுமார் ஆகியோர் வடிவழகுக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இலங்கை கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர். இலங்கை கடற்படை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. அவர்களை வரும் 21-ம் தேதி இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றது.