திமுக, அதிமுக, தேமுதிக வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது-அன்புமணி
சேலம்: பாமகவில் தான் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி கூறினார்.
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட பாமக இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டத்தில் அவர் பேசுகையி்ல்,
இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாமக தான். இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைகின்றனர். ஆனால், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய பிற கட்சிகளின் வளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது.
பாமக இளைஞர் சங்கத்தினர் தங்கள் பகுதியின் சிறிய பிரச்சனைக்குக் கூட போராட்டம் நடத்த வேண்டும்.
இளைஞர் சங்கத்தில் கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், விசுவாசத்துடனும் உழைக்கும் இளைஞர்களுக்கு கட்சியில் மட்டுமின்றி பல்வேறு பதவிகள் காத்திருக்கின்றன. இதற்காக தலைவர் ராமதாஸிடம் சண்டை போட்டு உங்களுக்கு பதவிகளை வாங்கித் தருவேன்.
எதிர்காலத்தில் கட்சியை வளர்க்கும் உங்களுக்கு எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் பதவிகள் காத்திருக்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அன்புமணியே நேரில் வருவான்.
பாமக இளைஞர்களுக்கென விரைவில் மாத இதழ் ஒன்று வெளியிடப்படும். இனிமேல் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெருகி விட்ட தகவல் தொழில்நுட்பம் காரணமாக அவர்கள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்றார்.