உணவுப் பணவீக்கம்: ஒரே வாரத்தில் 3 சதவீதம் அதிகரிப்பு!
பல்வேறு உணவுப் பொருள்களின் விலைகள் உச்சகட்டத்துக்குப் போய்விட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 9.46 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். இது அடுத்த மூன்று வாரங்களில் 5.5 சதவீதமாகக் குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு மாறாக 3 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. காரணம், எக்கச்சக்கமாக உயர்ந்து வரும் விலைவாசி.
பெட்ரோல் விலையை கணிசமாக உயர்த்திவிட்டன அரசு எண்ணெய் நிறுவனங்கள். இன்னொரு பக்கம் காய்கறிகளின் விலை உச்சாணிக் கொம்பில் உள்ளது. குறிப்பாக வெங்காயம் விலை செஞ்சுரி போட்டு, மக்களை மயக்கம் போட்டு விழ வைத்தது.
பழங்களின் விலையில் 17.83 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது. பால் பொருள்கள் விலை 20.15 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த அதிகபட்ச விலை உயர்வு, நாட்டின் உணவுப் பணவீக்கத்தை பெரிதும் உயர்த்தி விட்டுள்ளது.
இதன் விளைவாக, தனது பணவியல் கொள்கைகளில் மாறுதல்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.