தமிழக அரசின் மொழித் திணிப்பு ஆணையை எதிர்த்து தமிழர்களம் போராட்டம்
திருநெல்வேலி: தமிழக அரசின் மொழித் திணிப்பு ஆணையை எதிர்த்து தமிழர்களம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அன்மையில் தமிழக முதல்வர் கருணாநிதி தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபிக் ஆகிய மொழிகளைச் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் வாரத்திற்கு நான்கு முறை நடத்துப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும், அதற்கானப் பாடநூல்களை தமிழ்நாடு அரசே தன் செலவில் அச்சிட்டு வழங்கும் என்றார்.
இதைக் கண்டித்து தமிழர்களம் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளின் வாயிலாக மக்கள் நடுவில் கருணாநிதி அரசின் அன்னிய மொழித் திணிப்பு ஆணை பற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த கண்டன ஆர்பாட்டம் தமிழர்களத்தின் தென்மண்டலப் பொறுப்பாளர் மை.பா. சேசுராசு தலைமையில் நடைபெற்றது.
சேசுராசு போராட்டத்தின்போது பேசுகையில்,
தமிழ்நாட்டைத் திராவிட நாடாக மாற்றிய கருணாநிதி, இன்று இலங்கையில் ராஜபக்சே எப்படித் தமிழ் மொழி அழிப்பு செய்கிறாரா அதையே மறைமுகமாக தமிழ்நாட்டில் செய்து வருகிறார்.
அன்னிய மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன் வாயிலாக தமிழ் மொழி மேலும் புறக்கணிக்கப்பட்டு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படும்.
கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் 2 கோடித் தமிழர்கள் இருந்தாலும் அங்கு படிப்படியாக தமிழ்ப் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூடிவிட்டனர். அங்கெல்லாம் தமிழ்ச் சாதிகளுக்கு இருந்த இட ஒதுக்கீடு முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது.
ஆனால் தமிழ்நாட்டின் நிலையோ தலைகீழாக இருக்கிறது. இங்கு தமிழில் படிக்காமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நிலை இருக்கிறது. உச்ச நீதிமன்றப் பரிந்துரையான தொடக்கக்கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்பது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு இன்று அதற்கு நேர் எதிராக அன்னிய மொழிகளைத் திணிக்க கருணாநிதி பாடுபடுவது அவரது தெலுங்கு இன ஓர்மையின் வெளிப்பாடோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது என்றார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டச் செயலாளர் நிக்சன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அமலரசு, சங்கர், மூக்கையூர் நேசன், மள்ளர் களத்தின் செந்தில் மள்ளர் உள்ளிட்ட பலரும் எழுச்சியுரை ஆற்றினர்.