ஜல்லிக்கட்டிற்கான நிபந்தனைகளை தளர்த்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை
மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. இது மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.
ஆனால் இந்த விளையாட்டில் மாடுகளை மனிதர்கள் துன்புறுத்துவதாக கூறி விலங்குகள் நல அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து நீதிமன்றமும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஐ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நாடாளுமன்றத்தில் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்ததையும், அதனை காட்டுமிராண்டித்தனமானது, நாகரிகமற்றது என்று உச்ச நீதிமன்றத்தின் (முன்னாள்) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதையும் கண்டித்து தமிழர்களாகிய நாம் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்று வெப்துனியா டாட் காம் ஆசிரியர் அய்யநாதன் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்த நிபந்தனை ஏற்கனவே ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடைக்குச் சமமானது என்றும், அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் எஸ்.சிவனாண்டி, ஆர்.தர்மவீரன், ஏ.கே.கண்ணன், எஸ்.சமையன், பிரபு , வழக்கறிஞர் பகத் சிங், இதழாளர் அரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.