திமுகவுடன் காங். கூட்டணி தொடர்ந்தால் தேர்தலில் வெல்ல முடியாது-இளங்கோவன்
மதுரை: வருகிற சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் காங்கிரஸ் தோல்வியடையும் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
மதுரையில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,
ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் காங்கிரசாரின் கருத்துகளைக் கேட்டுள்ளார். அப்போது திமுக கூட்டணி வேண்டாம் என இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளனர்.
இதைக் கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக ராகுல் உறுதியளித்துச் சென்றுள்ளார். திமுக குடும்ப அரசியலைநடத்தி வருகிறது. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது அதன் வெற்றியை பாதிக்கும். இதுகுறித்து கட்சி மேலிடமும் நல்லதொரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன். மேலிடத்தின் முடிவே எங்களது முடிவும்.
திமுகவுடன் கூட்டணி தொடரும் என சோனியா காந்தி எந்தக் கூட்டத்திலும் அண்மையில் கூறவில்லை. இந்த நிமிடம் வரை திமுகவுடன் கூட்டணியில்தான் உள்ளோம். ஆனால், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது கட்சி மேலிடம் அறிவிக்கும்போதுதான் தெரியும்.
திமுக கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூறவில்லை. கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை என கே.வீ. தங்கபாலு கூறினார். ராகுல்காந்தி வருகையின்போது, திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளனர். அவர்கள் மீது தங்கபாலு நடவடிக்கை எடுப்பாரா?
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி அடைகிற வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என கருத்தைத் தெரிவித்தோம். மேலும் திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியே அடையும் என்று இப்போது கூறுகிறேன்.