தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் கட்சியைக் கலைத்து விடுவேன்-சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் சந்திரசேகர ராவ் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகளை சோனியா காந்தி தொடங்கட்டும். அதன் பின்னர் எனது கட்சியை உடனடியாக கலைத்து விடத் தயார்.
வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இதுதொடர்பாக கட்சிக்கு நெருக்குதல் தர வேண்டும். மேலும் ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை காங்கிரஸ் எம்.பிக்களும் புறக்கணிக்க வேண்டும்.
சோனியா காந்தி மட்டும் தெலுங்கானா மாநிலத்தை அமைக்க முன்வந்தால், அவரை தெலுங்கானா மக்கள் மதித்து வழிபடுவார்கள். ஆனால் தற்போது தெலுங்கானாவில் தேவையில்லாமல் கூடுதல் படையினரை குவித்து வைத்து வருகிறார்கள். இது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
1969ல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் வெடித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை எப்படி இருந்தாலும் சரி, நாங்கள் தெலுங்கானாவை அமைக்காமல் ஓய மாட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதிக்கவும் நான தயங்க மாட்டேன் என்றார் ராவ்.