சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் தரக் கூடாது-திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் கமிஷனர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி, துணை தேர்தல் கமிஷனர் டாக்டர் அலோக் சுக்லாவுடன் வியாழக்கிழமை தமிழகத்திற்கு வந்தார்.
பின்னர் டிரைடென்ட் ஓட்டலில் காலை 10.30 மணியளவில் அவர் அனைத்துக் கட்சி கூட்டத்தி்ல கலந்து கொண்டார்.
வாக்காளர்களுக்குப் பணம் தரக் கூடாது-திமுக:
இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையை முன்வைத்தனர். அதேபோல ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்துக் கட்சியினராலும் வைக்கப்பட்டது.
திமுக தரப்பில் கூறுகையில், ஒரு வாக்காளர், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அவர் அறிந்துகொள்ளும் வகையில், வாக்கு எந்திரத்தில் தனி அமைப்பு இருக்க வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே நீண்ட இடைவெளி இல்லாமல், வாக்குப் பதிவு முடிந்த உடனேயே குறுகிய கால அளவில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றனர்.
லத்திகா சரண் இருக்கக் கூடாது-அதிமுக:
அதிமுக பிரதிநிதிகள் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் சமயத்தில் டிஜிபி பொறுப்பில் லத்திகா சரண் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினர்.
பா.ம.க தரப்பில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விட்டு விட்டு மீண்டும் பழைய முறையிலான வாக்குச்சீட்டு முறையே தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் குரேஷி. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சரக காவல்துறை துணைத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
1.1.2011-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், 2011-ன் இறுதிப்பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடுவதாக இருந்தது. தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிக்கப்பட்டன. அதனால் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்தது. அதன்படி, வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி 10-ந் தேதி வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.