தெலுங்கானா தனி மாநிலம் அமையுமா?: ப.சிதம்பரத்திடம் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல்
அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரியாத நிலையில் ஆந்திரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கானா பகுதிகளில் மிக அதிகமான பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து ஆந்திராவில் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராயவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சிதம்பரம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பதற்றததை தணிப்பது என்ற முடிவில் மத்திய அரசு இருப்பதாகத் தெரிகிறது.
இந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்தாலும் அதற்கு ஆந்திராவில் சம அளவில் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பும் என்பதால், முதலில் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படு்த்திவிட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனால் இன்று காலை வரை இந்த அறிக்கை தாக்கல் எப்போது நடக்கும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
நேற்றே தாக்கலாகும் என்று கருதப்பட்ட இந்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. பிற்பகலில் ப.சிதம்பரத்தை ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு சந்தித்து அறிக்கையை சமர்பித்தது.
நேற்று தெலுங்கானா தொடர்பாக பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றால் பிற தனி மாநிலக் கோரிக்கைகளுக்கும் அது முன்மாதிரியாகிவிடுமே என்று அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் கவலை தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனால் கிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து மாநில மக்கள் அனைவரது கருத்தையும் கேட்டு அதன் அடிப்படையில் முடிவெடுப்பது என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கிருஷ்ணா அறிக்கை தாக்கலாகிவிட்டாலும் மக்களுடன் ஆலோசனை என்ற பெயரில் இந்தக் கோரிக்கை குறித்த இறுதி முடிவை எடுக்க மத்திய அரசு மேலும் சில வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது.
இந் நிலையில் இந்த விஷயத்தில் மீடியாக்கள் நிதானமாக செயல்பட வேண்டும், பதற்றத்தைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாக அமைச்சர் சிதம்பரத்துடன் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனியே ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை தொடர்பான செய்திகளை வெளியிட தனி அதிகாரியை ப. சிதம்பரம் நியமித்துள்ளதாகவும் அவர் தான் இது தொடர்பான விவரங்களை வெளியிடுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு:
இந் நிலையில் ஹைதராபாத் உள்பட தெலுங்கானா பகுதிகள் அனைத்திலும் போலீசாரும் மத்தியப் படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா பரிந்துரைகள் இல்லாவிட்டால் தெலுங்கானாவில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் தெலுங்கானா, ராயல சீமா, கடலோர ஆந்திரா ஆகிய மூன்று பிராந்தியங்கள் உள்ளன.
அதில் தெலுங்கானா பகுதியை ஆந்திராவில் இருந்து பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதையடுத்து இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி கடந்த பிப்ரவரி 3ம் தேதி அமைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பின் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே நேற்று நிருபர்களிடம் பேசிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா , எங்களது அறிக்கை தனி மாநில கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் என்று நம்புகிறோம். பெரும்பாலான மக்களுக்கு அதிகபட்ச திருப்தி அளிக்கும் விதத்தில் அறிக்கை அமையும். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடிப்பதாக, அனைத்து கட்சிகளும் உறுதியளித்து உள்ளன.
எனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் ஆந்திர மாநிலத்தில் அமைதி காக்கப்படும் என்று நம்புகிறோம். அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் இதில் முக்கிய பொறுப்பு உள்ளது என்றார். ஆனால் அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
அதே போல ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையில் உள்ள முழு விவரங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிடாது என்றே தெரிகிறது.
மேலும் பல தனி மாநில கோரிக்கைகள்:
தெலுங்கானாவைப் போலவே பிகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து மிதிலாஞ்சல்' அல்லது மிதுலா' மாநிலம் அமைக்க வேண்டும் என்றும்,
குஜராத் மாநிலத்தைப் பிரித்து செளராஷ்டிரா', கர்நாடக மாநிலத்தை பிரித்து கூர்க்', உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களின் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து பந்தல்காண்ட்',
கிழக்கு உத்தப் பிரதேசம், பிகார் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் சில பகுதிகளை இணைத்து போஜ்புரி' மாநிலம்,
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களைப் பிரித்து ஹரித் பிரதேஷ்' அல்லது கிசான் பிரதேஷ், மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா',
மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து 'கூர்க்கா லேண்ட்' ஆகிய தனி மாநிலங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.