மாஜி எம்பி ஜெயசீலன் சொத்து போலி ஆவணம் மூலம் வி்ற்பனை: 2 பேருக்கு வலைவீச்சு
நாசரேத்: நாசரேத்தில் முன்னாள் எம்பியின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்து போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர்.
நாசரேத்தைச் சேர்ந்தவர் ஏடிகே ஜெயசீலன். திமுக முன்னாள் எம்பியான இவருக்கு வெள்ளை மடத்தில் 7 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த நிலத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என நாசரேத் பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்தார்.
அப்போது அவரது நிலத்தில் 2 ஏக்கர் 38 சென்ட் நிலம் போலி ஆவணம் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து ஜெயசீலன் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயசீலன் சொத்திற்கு சின்னமதிகூடலைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் போலி ஆவணம் தயாரித்து கேரளாவை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார். அவர் 6 பேருக்கு அந்த சொத்தை விற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பால்ராஜ், பிரதீப் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.