அதிமுக கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்ய வேண்டியது ஜெ.தான்-வைகோ
சென்னை: அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,
இந்த 2011-ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக அரசியலில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முல்லை பெரியாறு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம்.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் இவ்வாண்டு தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.
காங்கிரஸ் கட்சியை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்க்கவில்லையே என்று கேட்கிறீர்கள். சமீபத்திய அவரது அறிக்கைகள் காங்கிரசை எதிர்த்தே அமைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று அவர் அறிவிக்கவில்லை.
அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஜெயலலிதாதான் முடிவு செய்வார். எங்களைப் பொறுத்தவரை மதிமுகவுக்கும், அதிமுகவுக்கும் உறவு சுமூகமாக உள்ளது. எங்கள் கூட்டணி தொடரும் என்றார் வைகோ.
காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற பேச்சும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. மறுபுறம் வைகோவுக்குக் கடுமையான போட்டியாளராக கருதப்படும் விஜயகாந்த்தும் கூட்டணிக்கு வரவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பாமகவும் கூட்டணிக்கு வரும் என்று தெரிகிறது. தேமுதிகவும், பாமகவும் கூட்டணிக்கு வந்தால், மதிமுகவுக்கு வழங்கப்படும் சீட்களின் எண்ணிக்கை வெகுவாக குறையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.