அறிவியல் காங்கிரஸைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் மன்மோகன் சிங்
டெல்லியிலிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் சென்னைக்குப் புறப்படுகிறார். இரவு ஏழே முக்கால் மணிக்கு சென்னையை வந்தடைகிறார். அங்கு அவரை முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் வரவேற்பு தருகிறார்கள். வரவேற்பை முடித்துக் கொண்டு பிரதமர் கார் மூலம் ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார்.
இரவு எட்டேகால் மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் நாளை காலை 9.20 மணிக்கு பிரதமர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மறைமலைநகர் புறப்படுகிறார். போர்டு தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் இறங்குகிறதா. அங்கிருந்து கார் மூலம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு 10 மணிக்குச் செல்லும் பிரதமர் 98வது இந்திய அறிவியல் காங்கிரஸைத் தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் பிரதமர் 11.50 மணிக்கு கார் மூலம் மீண்டும் போர்டு ஆலைக்கு வந்து அங்கிருந்து சென்னை வருகிறார். பிற்பகல் 12.20 மணிக்கு மீண்டும் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.
அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறக்கும் நிகழ்ச்சியும் இதில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்தப் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தராததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம், ஆளுநர் மாளிகை, போர்டு ஆலை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகம் ஆகியவை முழுப் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பிரதமரின் கார் செல்லும் பாதைகளிலும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5 நாள் நடைபெறும் இந்த மாநாடு நாளை தொடங்கி 7ம் தேதி முடிவடைகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் இதில் பங்கேற்கின்றனர். மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் தொடக்க உரை நிகழ்த்துவார்.