Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பறக்க' ஆரம்பித்திருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் விலைகள்!

Subscribe to Oneindia Tamil

Washing Mmachine
மும்பை: வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

நாட்டில் அனைத்துப் பொருள்களின் விலைகளும் முன்னெப்போதும் காணாத கடும் விலை உயர்வைக் கண்டு வருகின்றன.

வெங்காயம், தக்காளி, காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் சாதாரண மக்களை மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளன. அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எந்த விளைவையும் தராத நிலையில், இப்போது மற்ற நுகர்வோர் பொருள்களின் விலையும் கடுமையாக உயர ஆரம்பித்துள்ளது.

இன்றைய வாழ்க்கை முறையில் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவிடி - மியூசிக் சிஸ்டம், ஓவன், மிகசர் கிரைண்டர் போன்றவை அடித்தட்டு மக்கள் வீட்டிலும் தவறாமல் புழங்கப்படும் சாதனங்களாகிவிட்டன.

குடிசை வீடுகளிலும் கூட வாஷிங் மிஷின், ஓவன் தவிர்த்து பிற சாதனங்களைக் காண முடியும்.

அந்த அளவு அத்யாவசியமாகிவிட்ட பொருள்களின் விலைகளும் ஒரேயடியாக 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் சாதன தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோத்ரெஜ் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே 10 சதவீத விலையை உயர்த்திவிட்டன. இப்போது இரண்டாவது ரவுண்ட் விலை உயர்வுக்கு அடிபோடுகின்றன. பொங்கலுக்குள் மீண்டும் இவை 5 முதல் 10 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும். மார்ச் மாதம் பட்ஜெட் என்பதால் அதற்கு முன் மீண்டும் ஒரு விலை உயர்வும் சாத்தியமே என்று இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தயக்கமில்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

"எங்களைக் குறை சொல்லி பயன் ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் 30 சதவீத விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதால் இரண்டு மூன்று தவணைகளாக உயர்த்துகிறோம். காரணம் உலோகங்களின் அசாதரண விலை உயர்வு. குறிப்பாக ஸ்டீல் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது.." என்கிறார் கோத்ரெஜ் அப்ளையன்ஸஸ் சிஇஓ ஜார்ஜ் மெனெஸஸ்.

காப்பர், பாலிமர் விலைகளும் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளனவாம். இந்த மூன்று மூலப் பொருள்களும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் முக்கியம் என்பதால், இவற்றின் விலை லேசாக உயர்ந்தாலும், அது மக்களின் பர்ஸைப் பதம் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது.

கோத்ரெஜ் ப்ரிஜ் விலை ரூ 14610லிருந்து ரூ 16200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (230 லிட் ஃப்ராஸ்ட் ஃப்ரீ மாடல் - சென்னையில். டெல்லியில் ரூ 15800.). இதன் 300 லிட் மாடல் விலை ரூ 24500 லிருந்து 26000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மீண்டும் உயரக் கூடும் அதற்குள் வாங்கிவிடுங்கள் என்றுதான் கடைகாரர்கள் விற்று வருகிறார்கள்.

ஏஸி விலையை இந்த குளிர்காலத்தில்கூட 10 சதவீதம் கூட்டியுள்ளது சாம்சங். மற்ற பொருள்களின் விலையையும் ஏற்கெனவே உயர்த்திவிட்ட இந்த நிறுவனம், மீண்டும் சத்தமில்லாமல் ஒரு விலை உயர்வை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு ரூ 35000 கோடி. ஆனால் இந்த பெரிய மார்க்கெட் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சில்லோர் போட்டிச் சந்தையாக (Oligopoly structure) உள்ளது. எனவே எந்த நிறுவனமும் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதில்லை. இருக்கும் பிராண்டுகளின் தயாரிப்பாளர்கள் அனைவரும் மறைமுகமாக பேசி வைத்துக் கொண்டே விலைகளை உயர்த்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

இப்போது கோத்ரெஜ்-சாம்சங் விலைகள் உயர்ந்துள்ளன என்றால், மற்ற முக்கிய பிராண்டுகளான வேர்ல்பூல், பானாசோனிக், ஐபிஎம், சோனி, ஓனிடா, வீடியோகான் போன்றவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன என்பதே உண்மை. இந்த விலை உயர்வுகளை அரசும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

பட்ஜெட்டுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இப்போது நுகர்பொருள் விலைகள் பறக்க ஆரம்பித்துள்ளன. ஒரு வேளை பட்ஜெட்டில் சலுகைகள், மூலப் பொருள்களின் விலைக் குறைப்புகள் அறிவிக்கப்பட்டால், அப்போது பெயருக்கு சற்றே விலைக் குறைப்பை அறிவிக்கும் இந்த நிறுவனங்கள். ஆனால் அவர்களின் நிகர லாபம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதற்காகவே இப்போது ஜரூராக விலை உயர்வைச் செய்து வருகின்றனர்.

மொத்தத்தில், அரசு, மார்க்கெட் சக்திகள், பேரளவு நிறுவனங்கள் எல்லாரும் தங்கள் தங்கள் நலனில் குறியாக இருக்கிறார்கள். மக்கள் இவர்களுக்காக உழைக்கிறார்கள் என்பதே இன்றைய இந்திய மார்க்கெட் பொருளாதாரத்தின் நிதர்ஸனம்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+